ஈரான் மீது இனி தடை விதிக்க முடியாது.. கொதித்தெழுந்த 13 நாடுகள்..யுஎன்எஸ்சியில் மூக்குடைந்த அமெரிக்கா
நியூயார்க்: ஈரானுக்கு எதிராக சர்வதேச தடைகளை கொண்டு வர ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா செய்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர முயன்ற தீர்மானத்திற்கு பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் 15 நாடுகளில் 13 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
ஈரான் - அமெரிக்கா இடையே கடுமையான மோதல் தொடங்கியது 2018ல்தான். அதிபர் டிரம்ப் ஈரான் உடன் செய்து இருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இது மோசமான ஒப்பந்தம் என்று கூறி, ஒபாமா செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
ஈரான், 2015ல் செய்யப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி, அணு ஆயுதங்களை தயாரித்துள்ளது, ஆயுத ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறது, சோதனைகளை செய்துள்ளது என்று கூறி ஈரான் உடன் செய்த ஒப்பந்தத்தை டிரம்ப் நீக்கினார். இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியே வந்தது.
தடை கொண்டு வந்தார்
இதையடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலுடன் ஈரானுக்கு எதிரான இராணுவ தடைகளை, பொருளாதார தடைகளை டிரம்ப் கொண்டு வந்தார். ஈரானுக்கு எதிரான இந்த தடைக்கு அப்போதே ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஈரானுக்கு எதிரான ஆயுத உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி தடைகள் வரும் அக்டோபர் மாதத்தோடு முடிவிற்கு வருகிறது. இதில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் முடிவு எடுக்க வேண்டும்.
முயற்சி
இதையடுத்து ஈரானுக்கு எதிராக சர்வதேச தடைகளை நீட்டிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மீண்டும் முயற்சி செய்து வருகிறது. 2015ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக கூறி, டிரம்ப் இந்த தடையை நீட்டிக்க முயன்றார். ஆனால் ஈரானுக்கு எதிராக அமெரிக்க செய்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர முயன்ற தீர்மானத்திற்கு பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் 15 நாடுகளில் 13 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தோல்வி அடைந்தது
ஈரானின் ஒப்பந்தத்தில் இருந்து 2018ம் ஆண்டே அமெரிக்கா வெளியேறிவிட்டது. இப்படி வெளியேறிய ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி ஈரான் ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று அமெரிக்கா வாதம் செய்ய கூடாது. இது முழுக்க முழுக்க முரணானது என்று 13 நாடுகள் வாதம் வைத்துள்ளது.
அதன்படி பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், சீனா, வியட்னாம், நைஜர், செயின்ட் வின்சென்ட், தென் ஆப்பிரிக்கா, எஸ்டோனியா, துனிஷா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை அனுமதிக்கவில்லை. டோம்னிகன் ரீபப்ளிக் இன்னும் இதில் முடிவு எடுக்கவில்லை.
அமெரிக்கா தோல்வி
இதனால் ஈரான் மீது தடையை நீட்டிக்க அமெரிக்கா செய்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது. அதிலும் அமெரிக்காவை ரஷ்யா, சீனா கடுமையாக எதிர்த்து உள்ளது. இதற்கு மேலும் ஈரான் மீது தடைகளை விதிக்க அனுமதிக்க முடியாது என்று ரஷ்யா, சீனா கூறியுள்ளது. ஈரான் மீதான தடைக்கு அனுமதிக்கவில்லை என்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா பதிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இனி என்ன நடக்கும்
இனி இதில் இரண்டு விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. முதல் விஷயம் - ஈரானுக்கு எதிரான தடைகள் காலாவதியாகும். ஈரான் ஆயுத வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். இரண்டாவது விஷயம் - அக்டோபரில் தடை நீட்டிக்கப்படவில்லை என்றால் 20 நாட்கள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை நாட்டிற்கு அவகாசம் அளிக்கப்படும். அதாவது இந்த தலைமை நாடுகள் ஈரான் மீது தடை விதிக்கலாம்.
ஆனால் நடக்காது
ஆனால் இந்த மாதம் இந்தோனேசியாவும், அடுத்த மாதம் நைஜர் நாடும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை வகிக்கும். இதனால் அந்த நாடுகள், பெரும்பான்மை நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஈரான் மீது தடை விதிக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இதனால் ஈரான் பல்வேறு ஆயுத தடைகளில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.