அமெரிக்காவில் சோகம்... போராட்ட கூட்டத்தில் கார் புகுந்தது... பலர் படுகாயம்!
நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக நடந்த போராட்ட கூட்டத்தில் கார் புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து ஏற்படுத்திய காரை பெண் ஓட்டி வந்ததாகவும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அந்த காரில் இரண்டு பெண்கள் இருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நகரில் கருப்பின மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டகாரர்கள் அங்கு ஒன்று திரண்டு கறுப்பின மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்று, திடீரென போராட்டக்காரர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நான்கு புறமும் சிதறி ஓடினார்கள். அந்த கார் தறிகெட்டு ஓடி கூட்டத்தில் இருந்தவர்கள் மீது மோதியதால் பலர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் எத்தனை பேர் படுகாயம் அடைந்தனர் என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் 6 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.காயம் அடைந்தவர்களின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிகிறது.
அந்த காரை ஓட்டி வந்தது ஒரு பெண் என்பதும், அவரிடம் தற்போது போலீசார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விபத்து ஏற்படுத்திய காரில் இரண்டு பெண்கள் இருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.