இந்தியாவுக்கு எதிராக ஐநாவில் அறிக்கை.. 2 முறை மூக்குடைத்த அமெரிக்கா... கடுப்பான சீனா!!
நியூயார்க்: ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் கராச்சி பங்குச் சந்தை தாக்குதலை கண்டித்து சீனா கொண்டு வந்த கண்டன வரைவு அறிக்கையை சமர்ப்பிக்க விடாமல் அமெரிக்கா தாமதம் செய்ததால், சீனா கடுப்படைந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் இருக்கும் பங்குச் சந்தைக்குள் கடந்த வாரம் நான்கு தீவிரவாதிகள் நுழைந்தனர். இவர்களுக்கும், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது, தீவிரவாதிகள் கையுடன் கொண்டு வந்து இருந்த வெடிகுண்டுகளை பங்குச் சந்தைக்குள் வீசினர். இந்தச் சண்டையில் நான்கு தீவிரவாதிகளும் இறந்தனர். போலீசார் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷியும் குற்றம்சாட்டி இருந்தனர்.
இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த சூழலில் இதுகுறித்து கண்டன வரைவு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய சீனா முடிவு செய்து இருந்தது. இந்த நகலை புதன் கிழமை தாக்கல் செய்ய சீனா திட்டமிட்டு இருந்தது. ஆனால், இதை அமெரிக்கா தாமதப்படுத்தியது. இதற்கு முன்னதாக ஜெர்மனியும் தாமதப்படுத்தியது. மறைமுகமாக இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நகலை சீனா தயாரித்து இருந்தது.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சீனாவின் அறிக்கை இந்தியாவை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு இருந்ததுதான்.
டேட்டாக்களை வைத்து சீனாவின் பகீர் முயற்சி.. சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னணி
சீனா தயாரித்து இருந்த நகலில், ''குற்றவாளிகள், அமைப்பினர், நிதியுதவி அளித்தவர்கள், இந்த தாக்குதலுக்கு துணை போனவர்கள் என்று அனைவரின் மீதும் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக் கொள்கிறோம். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மற்றும் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நகலில் மறைமுகமாக இந்தியாவை சீனா குற்றம்சாட்டி இருந்தது. ஆதலால், மறைமுகமாக இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஜெர்மனும், அமெரிக்காவும் தாமதப்படுத்தின. இந்த செயல் சீனாவை எரிச்சல்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கையை கடந்த செவ்வாய் கிழமை நியூயார்க்கில் இருக்கும் ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் சீனா அறிமுகம் செய்தது. இந்த அறிக்கை வழக்கமான தீவிரவாத கண்டன அறிக்கைதான். இந்த அறிக்கைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், குறிப்பிட்ட கால வரையறை முடிந்த பின்னர் தானாக இந்த அறிக்கை நிறைவேற்றப்படும்.
ஆனால், இந்த வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அதே நேரத்தில் ஜெர்மன் எதிர்ப்பு தெரிவித்தது. ''இந்தியா மீது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி குற்றம்சாட்டி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியது. இதற்கு சீன பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அறிக்கையை நிறைவேற்றுவதற்கான காலக் கெடு ஜூன் 1ஆம் தேதி காலை 10 மணி என்று மாற்றி அமைக்கப்பட்டது.
அப்போதும் அமெரிக்கா தலையிட்டு அறிக்கையை தாமதப்படுத்தியது. இதனால் சீனா மேலும் கடுப்படைந்தது.
எப்படி இருந்தாலும் இந்த அறிக்கை பாதுகாப்புக் கவுன்சிலில் நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், உலக நாடுகள் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் எதிராக இருக்கிறது என்பதை ஐநா அரங்கில் உணர்த்தப்பட்டுள்ளது.