உளவு பலூன்..இம்முறை லத்தீன் அமெரிக்காவுக்கு மேல் ..பொய் சொல்லும் சீனா..ஏற்க மறுக்கும் பென்டகன்
வணிக விமானங்கள் 65 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். ஆனால் இந்த பலூன் சுமார் 1.2 லட்சம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகன் மேலே சீனாவின் பலூன் ஒன்று பறந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சீனா இந்த பலூனை வானிலை ஆய்வுக்காக அனுப்பியது என்று சொன்னாலும், அமெரிக்கா இதனை 'உளவு' பலூன் என்று குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் லத்தின் அமெரிக்க நாடு மீதும் இதேபோன்று இரண்டாவது பலூனை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.
Recommended Video
ஏற்கெனவே சீனாவுக்கும், அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் இருக்கும் நிலையில், தற்போது இந்த பலூன் பிரச்னை புதிய பஞ்சாயத்தாக வெடித்து கிளம்பியிருக்கிறது. தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதை விரும்பாத சீனா அமெரிக்காவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதன் காரணமாக இருநாட்டுகிடையேயான வணிகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக ஒரு சில நாட்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சீனாவுக்கு பயணம் செய்ய இருந்தார். ஆனால், இந்த பலூன் விவகாரத்தால் இப்பயணம் தள்ளிப்போகக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இது கூறித்து பென்டகன் தரப்பில் கூறுகையில், "பென்டகன் மேலே அமெரிக்காவின் ஹெலிகாப்டர்களே அடிக்கடி பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி ஒரு தடை செய்யப்பட்ட வான்வழியாகும். இப்படி இருக்கையில் நேற்று திடீரென ஒரு வெள்ளை நிற பலூனை நாங்கள் பார்த்தோம்.
இந்திய சொட்டு மருந்தை பயன்படுத்தியவர் அமெரிக்காவில் உயிரிழப்பு! சென்னை நிறுவனத்திற்கு பெரிய சிக்கல்
உளவு
இது ஏதோ வழித்தவறி வந்த பலூன் என்பதாக நாங்கள் நினைத்தோம். இருப்பினும் ஆய்வு செய்து பார்த்தபோது இது சீனா நாட்டுக்கு சொந்தமான பலூன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு உளவு பலூனாகும். இச்செயல் அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு விதிமீறலாகும். எங்களது தூதரகம் மூலம் இதனை சீனாவுக்கு விளக்குவோம். இப்பலூனை சுட்டு வீழ்த்தலாம் என்று நினைத்தோம். ஆனால் அது கீழே உள்ள மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் இந்த ஐடியா கைவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது. அதுபோல இந்த பலூன் தற்போது கனடா வான் எல்லைக்கு அருகே நகர்ந்துக்கொண்டிருக்கிறது.
விளக்கம்
பலூன் விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில் சீனா இது குறித்து விளக்கமளித்துள்ளது. அதில், "இந்த பலூன் முழுக்க முழுக்க வானிலை ஆய்வுக்காக மட்டுமே அனுப்பப்பட்டது. இது ஆகாய கப்பல் வகையை சார்ந்த பலூன். அதேபோல இந்த பலூன் சுயமாக இயங்கும் திறன் கொண்டதாகும். இப்படி இருக்கையில், காற்றின் வேகம் காரணமாக திட்டமிட்ட இலக்கை விட்டு இது நகர்ந்து சென்றுள்ளது. இது அமெரிக்காவின் வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் அமெரிக்காவை தொடர்பு கொண்டு விரிவாக விளக்குவோம்" என்று கூறியுள்ளது.
இரண்டாவது பலூன்
எது எப்படி இருப்பினும் இது வணிக விமானங்கள் பறக்கும் உயரத்தை விட அதிக உயரத்தில் பறப்பதால் விமான போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சீனாவின் இந்த விளக்கத்தை பென்டகன் ஏற்கவில்லை. இந்த சம்பவம் ஒரு சர்வதேச விதிமீறல்தான் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என்றும், எனவே தங்கள் தரப்பு குற்றச்சாட்டை தூதரகம் மூலம் சீனாவுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் பென்டகன் கூறியுள்ளது. இந்த பஞ்சாயத்து இப்படி நடந்துக்கொண்டிருக்கையில் சீனாவின் இரண்டாவது பலூனை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.
லத்தின் அமெரிக்கா
இந்த பலூன் தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது பறந்து வருகிறது. இது அந்நாடுகள் மீது நிலையாக ஓரிடத்தில் நிற்காமல் பறந்து சென்றவாரே இருப்பதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் பாட் ரைடர் கூறியுள்ளார். "வழக்கமாக செயற்கைக்கோள்கள் மூலம் இவ்வாறு உளவுப்பணிகள் நடக்கும். ஆனால் தற்போது பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பலூன்கள் கொண்டு உளவு பார்க்கப்படுகிறது" என பென்டகன் கூறியுள்ளது.