'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் காஷ்மீர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள இந்தியா, துருக்கி அதிபரின் பேச்சு இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளது. இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு விழாவில் காஷ்மீர் பிரச்சினையை தனது உரையில் எழுப்பியிருந்தார். இதற்கு ஆதரவாகவே துருக்கி அதிபரும் இந்தியாவிற்கு எதிராக பேசியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் துருக்கி அதிபர் எர்டோகனின் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒளிபரப்பானது. அதில், "தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு காஷ்மீர் மோதல் மிகவும் முக்கியமானது. இது இன்னும் எரியும் பிரச்சினை. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து நிலைமை மிகவும் சிக்கலானதாகிவிட்டது.
எல்லையில் தந்திரத்தை மாற்றிக் கொண்ட சீனா...டோக்லாம் பகுதியில் 13 ராணுவ தளங்களை அமைக்கிறது!!
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் கட்டமைப்பிற்குள், குறிப்பாக காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உரையாடலின் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்" என்றார். ஏற்கனவே கடந்த ஒரு வருடத்தில், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் தனது நட்பு நாடான துருக்கியை பல தளங்களில் பயன்படுத்தியுள்ளது. இருப்பினும், காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விஷயம் என்று மேற்கு ஆசிய நாடான துருக்கிக்கு பலமுறை இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.
துருக்கிக்கு பதிலடி
இந்த சூழலில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் எர்டோகன் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். அவரது வீடியா ஒளிபரப்பான சில மணிநேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, துருக்கி அதிபரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். எர்டோகன் மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதன் கொள்கைகளை இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஏற்க முடியாத கருத்து
திருமூர்த்தி இது தொடர்பாக வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில். "ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் யூனியன் பிரதேசம் இது குறித்து துருக்கி அதிபர் கூறிய கருத்துக்களை நாங்கள் கண்டிருக்கிறோம். அவரது கருத்து இந்தியாவின் உள் விவகாரங்களில் பெரும் தலையீட்டைக் கொண்டுள்ளது. அவரது கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. துருக்கி மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்கவும் அதன் கொள்கைகளை இன்னும் ஆழமாக சிந்திக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
நாடாளுமன்றத்தில் உரை
முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரியில், துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தானுக்கு பயணம் செய்ததோடு, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதும், காஷ்மீர் பிரச்சினை பாகிஸ்தானியர்களைப் போலவே துருக்கி மக்களுக்கும் முக்கியமானது என்று கூறியிருந்தார்.