மருத்துவர்களை குழப்பும் ஒரு விஷயம்.. மிக மோசமான நிலையில் நியூயார்க்.. அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
கொரோனா காரணமாக அமெரிக்காவில் மட்டும் இதுவரை 468,566 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நியூயார்க்: கொரோனா காரணமாக அமெரிக்காவில் மட்டும் இதுவரை 468,566 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்நாடு மிக மோசமான சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
கொரோனா காரணமாக உலகிலேயே மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக நியூயார்க் உருவெடுத்து உள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் எந்த ஒரு நாட்டையும் விட மிக அதிகமாக நியூயார்க் என்ற மாகாணத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகிலேயே நியூயார்க் சீனா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை முந்தி உள்ளது. உலகின் மிக முன்னணி நகரம் என்று வர்ணிக்கப்பட்ட நியூயார்க் நகரில்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அதிர வைத்த மும்பை.. ஒரே நாளில் 25 பலி.. நாடு முழுக்க 5868 பேருக்கு கொரோனா.. நேற்று என்ன நடந்தது?
நியூயார்க் எப்படி உள்ளது
நியூயார்க் நகரில் மக்கள் தொகை வெறும் 90 லட்சம்தான். அதில் தற்போது கொரோனா காரணமாக 161,504 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதான் அங்கு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகில் எங்கும் இப்படி ஒரு நிலை இல்லை. மூன்றாம் உலக நாடுகளில் கூட இப்படி மோசமான நிலை இல்லை. அங்கு 7,067 பேர் பலியாகி உள்ளனர். நியூயார்க் வரும் நாட்களில் இன்னும் அதிகமான கேஸ்களை சந்திக்கும் என்று கூறுகிறார்கள்.
குழப்பம்
நியூயார்க்கில் ஏற்பட்டு இருக்கும் இந்த நிலை குறித்து அந்நாட்டு மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாங்கள் கொரோனா குறித்து தவறாக சிந்தித்துவிட்டோம். இந்த கொரோனா மரணங்கள் எங்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது. அதிலும் கடந்த சில தினங்களாக ஏற்படும் மரணமும், அதன் வேகமும் எங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
மரணம் எப்படி ஏற்படுகிறது
தொடக்கத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட மரணங்கள் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் இது பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. நேற்று மட்டும் 1800 பேர் வரை பலியாகி உள்ளனர். முதியவர்கள்தான் அதிகம் பலியாகிறார்கள். போதிய சத்து இன்றி இருக்கும் நபர்கள் எளிதாக பலியாகிறார்கள். கொரோனா மரணங்கள் மிகவும் புதிராக உள்ளது.
நோயாளிகள் நிலை
ஒரு நிமிடம் நோயாளி நன்றாக இருக்கிறார். நாளையே டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று நல்ல உடல் நிலையில் உள்ளார். ஆனால் அடுத்த நொடியே அவருக்கு கொரோனா தீவிரம் அடைகிறது. திடீர் என்று கொரோனா அதிகம் ஆகி அவர் பலியாகிறார். இதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம் என்று அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
அடுத்த இரண்டு வாரம்
அமெரிக்காவில் இதே நிலை நீடித்து வந்தால் இன்னும் இரண்டு வாரங்களில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் பலியாக வாய்ப்புள்ளது. நியூயார்க் நகரத்திற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் 51,027 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 1700 பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலை அமெரிக்கா சரியாக எதிர்கொள்ளாததற்கு அதிபர் டிரம்பின் அலட்சியம் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் உண்மையான நிலை
கொரோனா காரணமாக அமெரிக்காவில் 468,286 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 16,663 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று அமெரிக்காவில் புதிதாக 33,256 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது.கடந்த 10 நாட்களில் நேற்றுதான் ஒரே நாளில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1872 பேர் பலியாகி உள்ளனர்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.