கேம் சேஞ்சர்.. களமிறங்கிய பில்கேட்ஸ்.. உருவாக்கப்பட்டது 'INO-4800' கொரோனா தடுப்பூசி.. இன்று சோதனை!
INO-4800 என்ற கொரோனா தடுப்பூசியை உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸின் நிறுவனம் இன்று சோதனை செய்கிறது.
நியூயார்க்: INO-4800 என்ற கொரோனா தடுப்பூசியை உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸின் நிறுவனம் இன்று சோதனை செய்கிறது.
Recommended Video
ஹாலிவுட்டில் ஹிட் அடித்த ஜஸ்டிஸ் லீக் படம் வந்த சமயம்.. உலகம் முழுக்க ஒரு வசனம் பிரபலமாக இருந்தது. அந்த படத்தில் வேகமாக ஓடும் சக்தி கொண்ட பிளாஷ் கதாபாத்திரம் பேட்மேன் பாத்திரத்தை பார்த்து .. நான் வேகமாக ஓடுவேன், அதுதான் என் சூப்பர் பவர். உங்களுடைய சூப்பர் பவர் என்ன என்று கேட்பார்.
அதற்கு சிரித்துக் கொண்டே அந்த பேட்மேன் பாத்திரம்.. என்னுடைய சூப்பர் பவரா? நான் பணக்காரன்! என்று அசால்ட்டாக கூறுவார். ஆம் பணம் என்பது எப்போதும் உலகில் சூப்பர் பவர். உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் அதை உண்மை என்று நிரூபித்து இருக்கிறார் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ்.
அப்பாடா.. நிம்மதி பெருமூச்சு விடும் சென்னை.. 3,300 பேருக்கும் கொரோனா இல்லை! மாநகராட்சி கமிஷனர் தகவல்
மைக்ரோசாப்ட் நிறுவனம்
மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தற்போது அதன் தலைமை பொறுப்புகளில் இருந்து விலகிவிட்டு உலகம் முழுக்க பல்வேறு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். கொரோனா மனிதர்களை தாக்கும் முன்பே, கொரோனா போல ஒரு வைரஸ் உருவாக வாய்ப்புள்ளது என்று அவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதாவது, எபோலா வைரசில் இருந்து நாம் தப்பித்துவிட்டோம்.. பல பணக்கார நாடுகள் எபோலாவில் இருந்து தப்பித்து விட்டது.ஆனால் இன்னொருமுறை நாம் இப்படி அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டோம்.
உலகம் முழுக்க உதவி செய்து வருகிறார்
இன்னொரு முறை வேறு வைரஸ் இப்படி உருவானால், அதில் இருந்து தப்பிக்க முடியாது, என்று உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் குறிப்பிட்டு இருந்தார். 6 வருடத்திற்கு முன்பே உலகை மிக கொடுமையான வைரஸ் தாக்க வாய்ப்புள்ளது என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி உலகம் முழுக்க நோய்களுக்கு எதிராக கடுமையான முயற்சிகளை, ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வந்தார்.
தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்
முக்கியமாக தன்னுடைய தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆப்ரிக்காவில் எபோலாவிற்கு எதிராக உதவிகளை செய்தார். நைஜீரியாவில் போலியோவை ஒழிக்க மருந்துகளை அனுப்பினார். தென் அமெரிக்காவில் மருந்துவ ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி அளித்தார். சார்ஸ் வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சிகளுக்கு அவ்வப்போது இவரின் தொண்டு நிறுவனம் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
கொரோனா மருந்து
உலகை கொரோனா தாக்கியதில் இருந்து, அதன் மீது தனது கவனத்தை மிக தீவிரமாக செலுத்தி வருகிறார் பில்கேட்ஸ். ஆம் கொரோனாவிற்கு எப்படி மருந்து கண்டுபிடிப்பது, அதில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பது தொடர்பான திட்டங்களை அரசுக்கு அளித்து வருகிறார். இன்னொரு பக்கம் தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி உள்ளார். மொத்தம் 7 நிறுவனங்களை இதற்காக அவர் உருவாக்கி உள்ளார் .
7 நிறுவனங்கள் உருவாக்கினார்
கொரோனாவை தடுப்பதற்காக இந்த 7 நிறுவனங்களும் தனி தனியாக வெவ்வேறு மருந்துகளை கண்டுபிடிக்கும். இதற்காக வெவ்வேறு இடங்களில் தொழிற்சாலைகளை பில்கேட்ஸ் அமைத்துள்ளார். வெவ்வேறு முறைகளில், தொழில்நுட்பத்தில் , வேறு வேறு மூலக்கூறுகள் மூலம் இந்த மருந்துகளை 7 நிறுவனங்கள் தனி தனியாக உருவாக்கும். இதில் 2 நிறுவனத்தின் மருந்துகள் கடைசியாக தேர்வு செய்யப்பட்டு அது மனிதர்களின் பயன்பாட்டிற்கு வரும்.
பெரிய இழப்பு
ஒரு மருந்தை ஆராய்ச்சி செய்து அது தோல்வி அடைந்து அடுத்த மருந்தை ஆராய்ச்சி செய்தால் பல மாதங்கள் ஆகும். அதனால் ஒரே நேரத்தில் 7 நிறுவனங்களை அமைத்து ஒன்றாக ஆராய்ச்சிகளை செய்தால் நேரம் மிச்சமாகும், என்று பில்கேட்ஸ் கூறுகிறார். இதற்கு பல பில்லியன் டாலர் செலவாகும். 7 நிறுவனங்களையும் அமைத்து சோதனைகளை செய்ய பல கோடி ரூபாய் செலவாகும்.
அதிக செலவு
7 மருந்து ஆராய்ச்சிகளில் நான் கடைசியாக தேர்வு செய்யும் 2 மருந்துகள் மட்டுமே பயன்படும். மீதம் உள்ள 5 மருந்து சோதனைக்கான செலவு வேஸ்ட்தான். ஆனால் தற்போது பணத்தை விட நேரம்தான் முக்கியம். மக்கள் உயிர்தான் முக்கியம். அதனால் 7 மருந்துகளின் ஆராய்ச்சிகளை ஒன்றாக செய்ய உத்தரவிட்டு இருக்கிறேன். தற்போது முதல் மருந்து சோதனைக்கு தயார் ஆகி உள்ளது, என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
பில்கேட்ஸ் நிறுவனம்
ஆம் பில்கேட்ஸ் உருவாக்கி உள்ள நிறுவனங்களில் ஒன்றான இனோவியா பார்மாசெட்டிக்கல்ஸ் இந்த மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த மருந்துக்கு INO-4800 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த மருந்தை சோதனை செய்ய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம், மருந்து ஒன்றை கண்டுபிடித்து சோதனை செய்து வருகிறது. தற்போது INO-4800 சோதனை செய்யப்பட உள்ளது.
சோதனை செய்கிறது
இந்த மருந்தை இரண்டு கட்டமாக சோதனை செய்ய உள்ளனர். முதலில் அமெரிக்காவின் பிலடேஃபியா, மிசோரி ஆகிய இடங்களில் உள்ள சோதனை கூடங்களில் இந்த சோதனை நடக்கும். அங்கு 40 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்படும். அவர்களுக்கு 4 வார இடைவெளியில் சோதனைகள் செய்யப்படும். இந்த சோதனை முடிவுகள் சரியாக இருந்தால், அதன்பின் வைரசுக்கு எதிராக எவ்வளவு துரிதமாக இந்த மருந்து செயல்படுகிறது என்று மேலும் 40 பேரிடம் இரண்டாம் கட்ட சோதனை நடக்கும்.
சோதனை எப்படி நடக்கும்
இந்த முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தால் அதன்பின் 100 பேரிடம் சோதனைகள் தொடரும். குறைந்தது 1 வருடத்திற்கு இந்த சோதனைகள் INO-4800 மருந்து மூலம் செய்யப்படும். ஆராய்ச்சி தொடங்கி வெறும் 1 மாதத்தில் இந்த INO-4800 மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது கொரோனா தடுப்பூசி போல செயல்படும். முதற்கட்டமாக 10 லட்சம் தடுப்பூசிகளை இதற்காக உருவாக்க உள்ளனர். மீதம் உள்ள 6 மருந்துகளும் இதேபோல் சோதனை செய்யப்படும். அதன்பின் கடைசியில் சிறப்பான இரண்டு மருந்துகள் தேர்வு செய்யப்படும் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.