பயோ - தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம்.. மௌனம் கலைத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. பகீர் எச்சரிக்கை!
கொரோனா தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு உலகம் முழுக்க தீவிரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நியூயார்க்: கொரோனா தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு உலகம் முழுக்க தீவிரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றுதான் ஐநா பாதுகாப்பு கவுன்சில். உலகின் மிக முக்கியமான நாடுகளான சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளது . ஜெர்மனி, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற சில நாடுகள் இதில் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளது.
இந்தியா இதில் தற்காலிக உறுப்பினராக இருந்துள்ளது. இந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கொரோனா தோன்றிய சமயத்தில் இருந்தே அதை பற்றி பெரிதாக பேசவில்லை. கொரோனா தாக்குதல் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் எதுவும் சொல்லவில்லை.
கொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து
முதல் முறை பேசியது
இந்த நிலையில் நேற்று இரவு, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதன் தலைவர் ஆண்டோனியோ குட்டேரஸ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதில் கலந்து கொண்டது. அதேபோல் ஜெர்மனி, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இதில் கலந்து கொண்டது. கொரோனா பரவி வரும் காலத்தில் இந்த கூட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
என்ன பேசினார்கள்
இந்த கூட்டம் குறித்து பேசிய ஆண்டோனியோ குட்டேரஸ், கொரோனா வைரஸ் உலகில் மக்களை எப்படி மருத்துவ ரீதியாக அச்சுறுத்தி வருகிறதோ அதேபோல் பாதுகாப்பு ரீதியாகவும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகளின் பாதுகாப்பு இதனால் கேள்விக்குறியாகி உள்ளது. உலகம் முழுக்க சமூக ரீதியான நிலையற்ற தன்மையை இது கொண்டு வரும்.
கலவரம் வரும்
அதேபோல் உலகம் முழுக்க இதனால் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது கொரோனாவிற்கு எதிரான நமது போராட்டத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டிய நேரம் இது. உலக நாடுகள் தங்கள் வேறுபாடுகளை மறந்துவிட்டு இணைந்து போராட வேண்டும். தங்கள் உள்நாட்டு பிரச்சனைகளை ஓரம்கட்டிவிட்டு நாடுகள் போராட வேண்டும். உள்நாட்டு போர்களை நிறுத்த வேண்டும்.
தீவிரவாத தாக்குதல்
இந்த கொரோனா அச்சம் தீவிரவாத தாக்குதல்களை உருவாக்கலாம். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் தாக்கலாம். பயோ தீவிரவாத தாக்குதல்களை கூட சில அமைப்புகள் நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. மக்கள் மத்தியில் இப்போதே அமைதி இன்மை நிலவி வருகிறது. அரசு மீது சிலர் நம்பிக்கை இழந்து உள்ளனர். சில நாடுகளில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.
பொருளாதார சிக்கல்
பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது, பல நாடுகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு இடையே இந்த ஊரடங்கு காரணமாக வேறுபாடுகள், வெறுப்புணர்வுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அரசு மீது நம்பிக்கை இழக்க வாய்ப்புள்ளது. இதை தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளும். இது நமக்கு சோதனையான காலம். இந்த தலைமுறைக்கான போராட்டம் இது, என்று ஆண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.