அரசியல் செய்ய வேண்டாம்.. மூட்டைகளில் பிணங்களை அள்ளும் நிலை வரும்.. டிரம்பிற்கு 'ஹு' விடுத்த வார்னிங்
கொரோனாவிற்கு எதிராக அரசியல் செய்து கொண்டு இருந்தால், உலகம் முழுக்க பிணங்களை மூட்டைகளில் அள்ள வேண்டிய நிலை வரும் என்று உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: கொரோனாவிற்கு எதிராக அரசியல் செய்து கொண்டு இருந்தால், உலகம் முழுக்க பிணங்களை மூட்டைகளில் அள்ள வேண்டிய நிலை வரும் என்று உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில் வேறு ஒரு பிரச்சனை உலகம் முழுக்க பெரிய அளவில் வெடித்துள்ளது. உலகின் மிக முக்கியமான வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிற்கும் உலக சுகாதார மையத்திற்கு இடையில் கடுமையான சண்டை வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த இரண்டு நாட்களாக கொடுத்த பேட்டிதான் இந்த சண்டைக்கு காரணம். இந்த இரண்டு பேட்டிக்கும் தற்போது உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் தெரிவித்துள்ள பதில் சண்டையை அதிகப்படுத்தி உள்ளது.
டிரம்ப் என்ன சொன்னார்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டிதான் இந்த சண்டையை தொடங்கி வைத்தது. அதில், உலக சுகாதார மையம் பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. பல தவறான விஷயங்களை பேசி வருகிறது. அவர்கள் சீனாவை ஆதரிக்கிறார்கள். நாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்க முடிவு செய்து இருக்கிறோம். மிக கடுமையான நடவடிக்கையை நாங்கள் எடுக்க போகிறோம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், என்றார்.
இன்று மீண்டும் பேட்டி
அதன்பின் இன்று அதிகாலையில் மீண்டும் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், உலக சுகாதார மையம் வரிசையாக தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. அது உலக நாடுகளை ஒரே மாதிரி பார்க்கவில்லை. சீனாவிற்கு அந்த அமைப்பு அதிக முக்கியத்துவம் தருகிறது. சீனா சொன்னதை அப்படியே உலக சுகாதார மையம் கேட்கிறது. அந்த அமைப்பிற்கு நாங்கள்தான் அதிகம் செலவு செய்வது.
பணம் கொடுத்தோம்
கடந்த வருடம் மட்டும் 452 மில்லயன் டாலர் பணம் கொடுத்தோம். சீனா எவ்வளவு கொடுத்தது தெரியுமா? சீனா வெறும் 42 மில்லியன் டாலர்தான் கொடுத்தது. 452 மில்லயன் டாலர் நாங்கள் கொடுத்தும் கூட, எல்லாம் சீனாவின் திட்டபடியே நடக்கிறது. சீனாவின் பேச்சைத்தான் உலக சுகாதார மையம் கேட்கிறது, என்று கடுமையாக டிரம்ப் விமர்சனம் வைத்துள்ளார்.
என்ன பதிலடி
இந்த இரண்டு விமர்சனங்களுக்கும் தற்போது உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் பதில் அளித்துள்ளார். அதில், கொரோனாவை வைத்து அரசியல் செய்ய கூடாது. அமெரிக்காவும், சீனாவும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. நாம் மிக மோசமான எதிரியை எதிர்கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் உலக அரசியலை சூடாக்குவது சரியானது கிடையாது.
அரசியல் வேறுபாடு எப்படி
அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் செயல்பட வேண்டும். இப்போது போய் நெருப்போடு விளையாட கூடாது. உலக அரசியலிலும், தேசிய அரசியலும் சண்டை ஏற்பட்டால் பெரிய பிளவு ஏற்படும். இந்த பிளவு வழியாகத்தான் கொரோனா உள்ளே வரும். அங்குதான் கொரோனா வெற்றிபெறும். ஏற்கனவே 60 ஆயிரம் பேருக்கும் அதிகமாக இறந்துவிட்டனர். முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள், என்று டெட்ராஸ் ஆதனாம் குறிப்பிட்டார்.
கடுமையான எச்சரிக்கை
டிரம்ப்பின் எச்சரிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த டெட்ராஸ் ஆதனாம், நாம் இங்கு அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மூட்டைகளில் பிணங்களை அள்ளும் நிலை வரும். உங்களுக்கு உங்கள் நாட்டில் அதிக பிண மூட்டைகள் வேண்டும் என்றால், இதை வைத்து அரசியல் செய்யுங்கள். இல்லையென்றால் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு உடனே களமிறங்கி பணியாற்றுங்கள்.
அரசியல் செய்ய வேண்டாம்
கொரோனா மூலம் அரசியலில் புகழ் பெற முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அரசியல் செய்ய வேறு இடங்கள் உள்ளது. எங்கள் பக்கம் இருக்கும் தவறுகளை நாங்கள் ஆராய்ந்து அதை திருத்திக் கொள்வோம். கொரோனா குறித்து நாம் தெரிந்து கொள்ளாத விஷயங்கள் இருக்கிறது. நாம் பிறரை குற்றஞ்சாட்டி நேரத்தை போக்கிக் கொண்டு இருக்க கூடாது. ஒற்றுமை மட்டும்தான் இந்த கொரோனவை எதிர்கொள்ள ஒரே வழி.
ஒற்றுமையாக செயல்படவில்லை
நாம் ஒற்றுமையாக செயல்படவில்லை என்றால், மிக மோசமான சூழ்நிலை ஏற்படும். கொரோனாவிடம் இருந்து உங்கள் அரசியலை ''தனிமைப்படுத்தி'' வையுங்கள். எங்களை சிலர் மிரட்டுகிறார்கள். இன்னும் சிலர் எனக்கு கொலை மிரட்டல் கூட விடுகிறார்கள். நாங்கள் எல்லாம் அதை பற்றி கவலைப்பட மாட்டோம். அதை குறித்து நாங்கள் சிந்திக்க மாட்டோம் என்று டெட்ராஸ் ஆதனாம் கூறியுள்ளார்.