ஹு உடன் சண்டை.. ஜெர்மனி, ஐரோப்பா, இந்தியாவுடன் மோதும் டிரம்ப்.. அமெரிக்காவை துரத்தும் கொரோனா அச்சம்!
கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்கா அடுத்தடுத்து மூன்று தவறுகளை செய்துள்ளது.
நியூயார்க்: கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்கா அடுத்தடுத்து மூன்று தவறுகளை செய்துள்ளது. இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் என்று உலகில் சக்தி வாய்ந்த நாடுகளுடன் அதிபர் டிரம்ப் மோதல் போக்கை கடைபிடிக்க தொடங்கி உள்ளார்.
தொடர் நெருக்கடி நிலவும் போது தலைவர்கள் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் உள்ளது. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுகளால் உலக நாடுகள் அழிந்த கதையும் சாம்ராஜ்யங்கள் வீழ்ந்த கதையும் இருக்கிறது. பல உலக மன்னர்கள் தொடங்கி ஹிட்லர் வரை வீழ்ந்தது எல்லாம் தவறான முடிவுகளால்தான்.
தற்போது அதேபோல் வரிசையாக தவறான முடிவுகளால் அமெரிக்கா என்ற தேசம் நிலை குலைந்து போய் உள்ளது. கொரோனா நோய் தாக்குதலின் அச்சம் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிசையாக நிறைய தவறுகளை செய்து வருகிறார்.
அச்சத்திற்கு காரணம்
கொரோனா காரணமாக உலகிலேயே மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக 395,739 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 12805 பேர் பலியாகி உள்ளனர். நேற்று அமெரிக்காவில் புதிதாக 28785 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது.
இனிமேல்தான் சிக்கல்
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 2011 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் அமெரிக்காவில் இனிமேல்தான் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதான் அமெரிக்காவை மொத்தமாக நிலைகுலைய வைத்துள்ளது. டிரம்பின் அச்சத்திற்கும் இதுதான் காரணம்.
சீனா மீண்டது
ஒரு பக்கம் கொரோனாவில் இருந்து மீண்டு இருக்கும் சீனா தற்போது உலக நாடுகளுக்கு ஏற்றுமதியை தொடங்கி உள்ளது. இதனால் உலக நாடுகள் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் உலகின் ''அண்ணன்'' போல பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மவுஸ் தற்போது குறைந்துள்ளது. அதோடு கொரோனாவிற்கு எதிரான தோல்வி காரணமாக அமெரிக்கா மீது இருந்த பயம் போய் எல்லோரும் அந்த நாட்டை பரிதாபமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள்.
பெரிய கோபம்
அமெரிக்கா பலம் வாய்ந்த நாடு என்று நினைத்தவர்கள்.. அட இவர்கள் என்ன மூன்றாம் உலக நாடுகளை விட மோசமாக இருக்கிறார்கள். கொரோனாயிடம் சின்ன வியட்நாம் வெல்லும் போது அமெரிக்கா மண்டியிட்டுவிட்டது என்று பலரும் விமர்சிக்க தொடங்கி உள்ளனர். இதனால் உலக நாடுகளை கண்ட்ரோலில் வைத்து இருந்த அமெரிக்காவின் கைப்பிடி நழுவ தொடங்கி உள்ளது. அந்த கைப்பிடி கொஞ்சம் கொஞ்சமாக சீனா வசம் சென்றுள்ளது.
தவறுகள் செய்கிறார்
மருந்து பொருட்களுக்கு அமெரிக்கா கையேந்தி நிற்கும் நிலையில் சீனாவோ உலகம் முழுக்க மருந்துகளை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளது. உலக நாடுகள் எல்லாம் சீனா அனுப்பும் மருந்துகளுக்கு காத்திருக்கும் நிலை வந்துள்ளது. அமெரிக்காவின் உற்ற நண்பன் (முன்னாள் நண்பன்) இந்தியா கூட இன்று சீனாவிடம் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வாங்கியது. இதனால் சீனாவிடம் எங்கே தன்னுடைய ஸ்தானத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அமெரிக்காவிற்கு வந்துள்ளது.
முதல் தவறு
இந்த அச்சம்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் தவறான முடிவுகளை எடுக்க காரணம். உலகமே சீனாவை நம்பி இருக்கும் நிலையில், டிரம்ப் முடிந்த அளவு நண்பர்களை சேகரிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, டிரம்ப் முதல் காரியமாக இரண்டு வல்லரசு நாடுகளை பகைத்துக் கொண்டார். அதன்படி ஜெர்மனி, பிரான்ஸ் என்ற இரண்டு நாடுகளை டிரம்ப் பகைத்துக் கொண்டார். ஜெர்மனி அமெரிக்கா மீது அசுர கோபத்திற்கு இதனால் சென்றுள்ளது.
ஜெர்மனி கோபம்
ஆம் உலக நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் மருத்துவ உபகரணங்கள், மாஸ்குகளை அடித்து பிடுங்கும் வேலையில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இதுவரை மூன்று முறை வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய மாஸ்குகளை, அமெரிக்கா தங்கள் நாட்டிற்கு திருப்பி உள்ளது. ஜெர்மனிக்கு சீனாவில் இருந்து 2 லட்சம் மாஸ்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதை நடு வானில் கூடுதல் பணம் கொடுத்து அமெரிக்கா வாங்கியது. இதனால் ஜெர்மனுக்கு செல்ல வேண்டிய மாஸ்க் நியூயார்க் சென்றது.
பிரான்ஸ் ஏமாற்றம்
அதேபோல் இதன் கடந்த வாரம் பிரான்சிற்கு 20 லட்சம் மாஸ்குகளை சீனா ஏற்றுமதி செய்ய இருந்தது, சீனாவிடம் பிரான்ஸ் அவசர அவசரமாக இந்த 20 லட்சம் மாஸ்குகளை ஆர்டர் செய்தது. ஆனால் சீனாவில் இந்த மாஸ்க் ஏற்றுமதி செய்யப்படும் சில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்கா அதை தங்கள் பக்கம் திருப்பி உள்ளது. பிரான்ஸ் கொடுத்ததை விட அதிக தொகை கொடுத்து அமெரிக்கா இந்த மாஸ்குகளை தங்கள் நாட்டிற்கு மாற்றிக்கொண்டு உள்ளது. இதனால் மாஸ்க் இன்றி தவிக்கும் நிலைக்கு பிரான்ஸ் சென்றுள்ளது.
தவறு 3
பிரான்ஸ், ஜெர்மன் என்று இரண்டு நெருக்கமான நாடுகளை மருந்துக்காக பகைத்துக் கொண்ட டிரம்ப் தனது நண்பர் பிரதமர் மோடியையும் பகைத்துக் கொண்டார். கொரோனா காரணமாக இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் வெறும் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை ஏற்றுமதி செய்யவில்லை என்றால் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று நேரடியாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
டிரம்ப் எச்சரிக்கை
டிரம்ப் இவ்வளவு கோபமாக எச்சரிக்கை விடுப்பார் என்று இந்தியா நினைக்கவில்லை. டிரம்ப் இப்படி பேசிய 6 மணி நேரத்தில், ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை அண்டை நாடுகளுக்கும், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வோம் . மனித நேயத்தை அடிப்படையாக் கொண்டு இந்த முடிவை எடுக்கிறோம், என்று இந்தியா அறிவித்தது. டிரம்பின் இந்த எச்சரிக்கை இந்தியா, அமெரிக்கா உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தியது.
மூன்றாவது தவறு
வரிசையாக இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை பகைத்துக் கொண்ட டிரம்ப் இன்று உலக சுகாதார மையத்தையும் விட்டுவைக்காமல் அவர்களையும் பகைத்துக் கொண்டார். எப்போதையும் விட இப்போதுதான் உலக சுகாதார மையத்தின் உதவி அமெரிக்காவிற்கு அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த நேரம் பார்த்துதான் அமெரிக்கா உலக சுகாதார மையத்துடன் சண்டை போட்டுள்ளது.
டிரம்ப் என்ன சொன்னார்
உலக சுகாதார மையம் குறித்து பேசிய அதிபர் டிரம்ப் தனது செய்தியாளர் சந்திப்பில், உலக சுகாதாரம் மையம் எங்களிடம் இருந்து அதிக அளவில் நிதிகளை பெறுகிறது. ஆனால் அவர்கள் சீனாவிற்கு ஆதரவாகவே அதிகமாக செயல்படுகிறார்கள். உலக சுகாதார மையம் பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. அதனால் நாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்க முடிவு செய்து இருக்கிறோம், என்று டிரம்ப் கூறியுள்ளார்.
மூன்று தவறுகள்
கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்கா அடுத்தடுத்து இப்படி மூன்று தவறுகளை செய்துள்ளது. முதலில் ஜெர்மன், பிரான்ஸை பகைத்தது. அதற்கு அடுத்து இந்தியாவை பகைத்தது, தற்போது உலக சுகாதார மையத்தையும் அமெரிக்கா பகைத்து உள்ளது. உலக நாடுகளின் உதவி அதிகம் தேவைப்படும் காலத்தில் அமெரிக்கா இப்படி வரிசையாக தவறுகளை செய்து வருவது அந்நாட்டிற்கு நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.