டிரம்ப் செய்த தவறு.. சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த 4.3 லட்சம் பேர்.. கொரோனா இப்படித்தான் பரவியதா?
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை சீனாவில் இருந்து சுமார் 4.3 லட்சம் பேர் அமெரிக்காவிற்கு விமானங்கள் மூலம் வந்துள்ளனர்.
நியூயார்க்: கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை சீனாவில் இருந்து சுமார் 4.3 லட்சம் பேர் அமெரிக்காவிற்கு விமானங்கள் மூலம் வந்துள்ளனர். இதில் பலர் வுஹன் போன்ற நகரங்களில் இருந்து நேரடியாக வந்துள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனா பரவ தொடங்கிய சமயம் அது. வாஷிங்டனில் அப்போதுதான் ஜனவரி 20ம் தேதி ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. ஆனால் அவர் குணப்படுத்தப்பட்டார். இதனால் அமெரிக்கா கொரோனா பிரச்சனையில் இருந்து தப்பித்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.
அமெரிக்க அதிபர் டிரம்பும் கூட கொரோனாவை நாங்கள் விரட்டிவிட்டோம், அமெரிக்காவிற்கு இனி கொரோனா சிக்கல் இல்லை என்று கூறினார். அதிபர் டிரம்பிற்கு அவரின் கட்சியினர் ''கொரோனா கொண்டான்'' என்று பெயர் மட்டும்தான் வைக்கவில்லை. மற்றபடி அமெரிக்காவே கொரோனா அச்சத்தில் இருந்து விலகி நிம்மதியாகத்தான் இருந்தது.
கொரோனா வைரஸ் எப்படி தாக்கியது? கர்நாடகா அதிகாரிகளை விழிபிதுங்க வைக்கும் புதிய சிக்கல்
சிக்கல் தொடங்கியது
ஆனால் ஜனவரி இறுதியில் உலக சுகாதார மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவ வாய்ப்புள்ளது. இது உலகம் முழுமைக்குமான மருத்துவ எமர்ஜென்சி என்று கூறியது. அதன்பின்தான் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவின் தீவிரத்தை அமெரிக்கா உணர தொடங்கியது. இதனால் அமெரிக்கா தங்கள் நாட்டிற்குள் ஜனவரி 31 முதல் விமான போக்குவரத்துக்கு தடை விதித்தது.
டிரம்ப் அறிவிப்பு
ஜனவரி 31ம் தேதி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பின் சாராம்சம் இதுதான், சீனாவில் இருந்து சீனர்கள் யாரும் அமெரிக்கா வர முடியாது. சீனாவில் உள்ள அமெரிக்கர்கள் அமெரிக்கா வரலாம். வேறு நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் மக்கள் வரலாம். ஆனால் வெளிநாட்டு மக்கள் யாராவது 2 வாரத்திற்குள் (ஜனவரி 15-30) சீனா சென்று இருந்தால் அவர்கள் அமெரிக்காவிற்கு வர முடியாது . ஹாங்காங் மக்கள் அமெரிக்காவிற்கு வரலாம் என்று வித்தியாசமான தடையை பிறப்பித்தார்.
தோல்வி அடைந்தார்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த தடை மூலம் எளிதாக கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை சீனாவில் இருந்து சுமார் 4.3 லட்சம் பேர் அமெரிக்காவிற்கு விமானங்கள் மூலம் வந்துள்ளனர். இதில் பலர் வுஹன் போன்ற நகரங்களில் இருந்து நேரடியாக வந்துள்ளனர். டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்ட பின் 40 ஆயிரம் பேர் சீனாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ளனர் .
பெரிய தவறு செய்தார்
ஒரே ஆறுதல் இவர்கள் யாரும் சீனர்கள் கிடையாது. ஆனால் அனைவரும் சீனாவில் இருந்து வந்த அமெரிக்கர்கள். அமெரிக்க அதிபர் ''இந்த வைரஸ் சீனர்கள் மூலம்தான் பரவும், அமெரிக்கர்கள் மூலம் பரவாது'' என்று நினைத்துக் கொண்டார் போல. சீனாவில் இருந்து கொத்து கொத்தாக இந்த அமெரிக்கர்கள் நியூயார்க், வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ, சியாட்டல், சிகாகோ ஆகிய மாகாணங்களுக்கு சென்று உள்ளனர். அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்கு இவர்கள் சீனாவில் இருந்து பயணம் செய்துள்ளனர்.
ஸ்கிரீனிங் செய்யப்படவில்லை
பிப்ரவரி 2ல் இருந்து மார்ச் இறுதி வரை சீனாவில் இருந்து அமெரிக்கா வந்த 279 விமானங்களில் பலர் இப்படி வந்துள்ளனர். இதில் பலர் விமான நிலையத்தில் ஸ்கிரீனிங் செய்யப்படவில்லை. அவர்களிடம் சில கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு அனுப்பி இருக்கிறார்கள். வெகு சிலர் மட்டுமே ஸ்கிரீனிங் செய்யப்பட்டுள்ளனர். யாருமே வீட்டில் தனிமைப்படுத்தப்படவில்லை.
யார் முதல் நபர்
இதனால் அமெரிக்காவிற்குள் முன்பே கொரோனா நுழைந்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதாவது ஜனவரி 20ம் தேதியில் ஒருவருக்கு கொரோனா வந்ததே, அதற்கு முன்பே அமெரிக்காவிற்குள் கொரோனா நுழைந்து இருக்க வாய்ப்புள்ளது. அது அமெரிக்காவிற்கு கூட தெரிந்து இருக்காது. அமெரிக்காவின் பேஷண்ட் 0 யார் என்று அந்த நாட்டிற்கே தெரியாது. அவர்களுக்கு தெரியாமலே அமெரிக்காவிற்குள் பல ஆயிரம் பேருக்கு கொரோனா பரவி உள்ளது என்று கூறுகிறார்கள்.
இதுதான் காரணம்
இதுதான் அமெரிக்கா தற்போது கொரோனாவிடம் கஷ்டப்பட காரணம் ஆகும். இந்த 4.3 லட்சம் பேரில் 100 பேருக்கு கொரோனா இருந்திருந்தால் கூட அது பல்கி பெருகி இருக்கும். இதில் பலர் வுஹன் நகரில் இருந்து வேறு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் கொரோனா காரணமாக அமெரிக்காவில் 468,286 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்கா எப்படி இருக்கிறது
அமெரிக்காவில் நேற்றுதான் மிக மோசமான நாளாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் 16,663 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று அமெரிக்காவில் புதிதாக 33,256 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது.கடந்த 10 நாட்களில் நேற்றுதான் ஒரே நாளில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1872 பேர் பலியாகி உள்ளனர்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.