கொரோனா சீனாவில் "செயற்கையாக உருவாகவில்லை".. ஒரு ஆதாரமும் இல்லை.. அமெரிக்காவிற்கு ஹூ நெத்தியடி!
கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாகவில்லை, சீனாவில் உள்ள சோதனை கூடத்தில் இந்த வைரஸ் உருவாக்கப்படவில்லை என்று உலக சுகாதார மையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
நியூயார்க்: கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாகவில்லை, சீனாவில் உள்ள சோதனை கூடத்தில் இந்த வைரஸ் உருவாக்கப்படவில்லை என்று உலக சுகாதார மையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில், இந்த கொடிய வைரஸ் சீனாவில் இருக்கும் வுஹன் ஆராய்ச்சி கூடத்தில் இருந்து உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது. போக போக இது சீனாவிற்கு எதிரான புகாராக மாறியது.
கொரோனா வைரஸை பரப்பியது சீனாதான். அங்கிருந்து இந்த வைரஸ் சோதனை கூடத்தில் கசிந்து மனிதர்களை தாக்கி உள்ளது. எங்களிடம் இதற்கு ஆதாரம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
குற்றச்சாட்டு பரபரப்பு
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது உலக சுகாதார மையம் பதில் அளிக்க தொடங்கி உள்ளது. உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வைரஸ் சோதனை கூடத்தில் தோன்றியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அமெரிக்க அரசு வைக்கும் புகார்களுக்கு போதுமான ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இந்த வைரஸ் சோதனை கூடத்தில்தான் உருவானது என்பதற்கு ஒரு ஆதாரம் கூட இல்லை.
அமெரிக்கா சர்ச்சை
அமெரிக்காவின் புகார்கள் சர்ச்சை அளிக்கும் வகையில் உள்ளது. அவர்கள் ஊகத்தின் அடிப்படையில் பேசுகிறார்கள். நாங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் செயல்படும் அமைப்பு. அமெரிக்கா எங்களுக்கு ஆதாரங்களை வழங்கினால் அதில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். உலக சுகாதாரத்திற்கு அந்த ஆதாரங்கள் பெரிய உதவியாக இருக்கும். எங்களுக்கு ஆதாரங்கள் தருவதா வேண்டாமா என்று அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள் முடிவு செய்யுங்கள்
ஆதாரம் இல்லாமல் எங்களால் முடிவு எடுக்க முடியாது. நாங்கள் மொத்தம் 15000 ஜீனோம் சோதனைகளை செய்து இருக்கிறோம். எங்கள் சோதனையின் அடிப்படையில் சொல்கிறோம், கொரோனா வைரஸ் இயற்கையில் தோன்றியதுதான். இது செயற்கையானது கிடையாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது.
ஆராய்ச்சி செய்கிறோம்
இந்த வைரஸின் தோற்றம் குறித்து நாங்களும் தொடக்கத்தில் இருந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். சீனாவில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து பல தகவல்களை பெற்று இருக்கிறோம். இந்த வைரஸ் வேண்டுமென்றே வெளியேற்றப்பட்டு இருந்தால் அது அறிவியல் பிரச்சனை இல்லை அரசியல் பிரச்சனை. ஆனால் இந்த வைரஸ் செயற்கையாக உருவானது என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை, என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.