35 கார்ப்பரேட் நிறுவனங்கள்.. தொடங்க போகும் 'மனித சோதனை'.. கொரோனா மருந்து உற்பத்தி.. சைலன்ட் யுத்தம்!
கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுக்க இருக்கும் முக்கியமான ஆராய்ச்சி நிறுவனங்கள் மிக கடுமையாக போட்டியிட்டு வருகிறது.
நியூயார்க்: கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுக்க இருக்கும் முக்கியமான ஆராய்ச்சி நிறுவனங்கள் மிக கடுமையாக போட்டியிட்டு வருகிறது.
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதுதான் தற்போது உலகம் முழுக்க இருக்கும் வல்லரசு நாடுகளின் முக்கியமான குறிக்கோளாக இருக்கிறது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் நபருக்கு ''லைப் டைம் செட்டில்மென்ட்'' கொடுக்க உலக நாடுகள் தீவிரமாக தயாராகி வருகிறது.
முக்கியமாக கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் மிக தீவிரமாக முயன்று வருகிறது. யார் முதலில் மருந்தை கண்டுபிடிப்பது என்று தீவிரமாக போட்டி நிலவி வருகிறது.
எத்தனை நிறுவனங்கள்
இந்த நிலையில் கொரோனாவிற்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதற்காக மொத்தம் 35 கார்ப்பரேட் நிறுவனங்கள் மிக கடுமையாக முயன்று வருகிறது. இந்த 35 நிறுவனங்கள்தான், இந்த மருந்து ஆராய்ச்சியில் முன்னிலை வகித்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் போக இதில் சில கல்வி நிறுவனங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாஸ்டன் நிறுவனமும், க்யூர்வேக் நிறுவனம், நோவாவேக்ஸ், செபி (கூட்டமைப்பு) ஆகிய 4 நிறுவனங்கள் இதில் முன்னிலை வகிக்கிறது.
முதல் சோதனை
கொரோனாவிற்கு எதிராக க்யூர்வேக் நிறுவனம் முதல் சோதனையை செய்துவிட்டது. இதற்கான முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்கள் ஆகும். இன்னொரு பக்கம் அமெரிக்காவில் உள்ள மாடர்னா தெரஃபேட்டிக்ஸ் என்ற நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னிலை வகித்துள்ளது. வெறும் 42 நாட்களில் இந்த நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதை தற்போது விலங்கு சோதனை முடித்துவிட்டு, மனித சோதனைக்காக அந்நாட்டின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி உள்ளது.
சோதனைக்கு முன் வந்தனர்
இதன் மருத்துவ சோதனைக்கு இரண்டு பேர் ஏற்கனவே தாமாக முன் வந்துள்ளனர். டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து அமெரிக்கா கொண்டு வரப்பட்ட கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இந்த சோதனைக்கு தாமாக முன் வந்து உள்ளார். அதேபோல் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபரும் சோதனைக்கு முன் வந்துள்ளார். இவர்கள் இருவரிடமும் இந்த மருந்து சோதனை செய்யப்பட உள்ளது. கொரோனாவிற்கு எதிரான மருந்துகளை மனிதர்கள் மீது மற்ற நிறுவனங்களும் இன்னும் சில வாரங்களில் சோதனை செய்யும்.
சீனாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்
பொதுவாக மனிதர்களிடம் சோதனை செய்ய அதிக நாட்கள் ஆகும். ஆனால் இந்த முறை அவ்வளவு காலம் ஆகவில்லை. இந்த வேகமான ஆராய்ச்சிக்கு ஒரு வகையில் சீனாவிற்கு நன்றி சொல்ல வேண்டும். கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த SARS-CoV-2 வைரஸ் மூலம் பரவும் நோய்தான் COVID-19 ஆகும். கொரோனா வைரஸ் குடும்பத்தில் மொத்தம் 6 வைரஸ்கள்தான் இருக்கிறது என்று கருதப்பட்ட நிலையில் தற்போது 7வதாக உருவாகி இருக்கும் வைரஸ்தான் SARS-CoV-2. இந்த வைரஸ் உருவாகி ஒரு மாதத்தில் அதன் மைக்ரோஸ்க்கோப் புகைப்படத்தை முதல் நாடாக மிக வேகமாக வெளியிட்டது சீனா. சீனா வெளியிட்ட ஜீனோம் படம் விஞ்ஞானிகளுக்கு உதவியது. தற்போது இதுதான் வைரஸ் மருந்து சோதனையை வேகப்படுத்தி உள்ளது.
சார்ஸ் காரணம்
அதேபோல் சார்ஸ் வைரஸ் வைத்து செய்யப்பட்ட சோதனைகளும் இதில் முக்கிய பங்கு வகித்தது. 2003ல் சீனாவை தாக்கிய சார்ஸ் வைரஸ், அதன்பின் மத்திய கிழக்கு நாடுகளை தாக்கிய மெர்ஸ் வைரஸ் இரண்டும் கொரோனா குடும்பத்தை சேர்த்த வைரஸ் ஆகும். இரண்டு வைரசும் ஒரே மாதிரி குணம் கொண்டது. தற்போது உள்ள SARS-CoV-2 வைரஸ் மற்றும் சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் எல்லாம் 85-90% ஒரே மாதிரியான ஜீன் அமைப்பை கொண்டுள்ளதால், கொரோனா மருந்து கண்டுபிடிப்பது கொஞ்சம் எளிதாகி உள்ளது. இது இரண்டும்தான் இந்த வைரஸ் மருந்து சோதனையை வேகப்படுத்தி உள்ளது.
இன்னொரு வகை என்ன
கொரோனா வைரஸ் சோதனையில் சார்ஸ் வைத்து செய்யப்படும் சோதனை இல்லமால் இன்னொரு வகையான சோதனையும் நடக்கிறது. கொரோனா வைரஸ் மனித உடலில் நுழைந்தால் மனித உடலில் இருக்கும் ACE2 எனப்படும் ரத்த அழுத்த செல்களைத்தான் குறி வைக்கிறது. கொரோனாவில் உள்ள ஸ்பைக் புரோட்டின்கள்தான் இதை செய்கிறது. இந்த ஸ்பைக் புரோட்டின்கள் இணைந்து உருவாக்கப்பட்ட ஆர்பிடி எனப்படும் the receptor-binding domain பகுதிதான் உடலில் இருக்கும் செல்களை துளையிட்டு, அதற்குள் சென்று நோயையே பரப்புகிறது.
அழிக்க முடிவு
இந்த ஸ்பைக் புரோட்டின்கள் அனைத்தையும் அழித்து அதன் மூலம் கொரோனாவை செயல் இழக்க செய்யும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அதாவது சில நிறுவனங்கள் சார்ஸ் மூலம் கற்றுகொண்ட பாடங்களை வைத்து ஆராய்ச்சிகளை செய்கிறார்கள். சில நிறுவனங்கள் முழுக்க முழுக்க புதிய ஆராய்ச்சிகளை செய்து, கொரோனாவை அழிக்க புதிய திட்டங்களை வகுத்து வருகிறார்கள்.
நான்கு படிநிலைகள்
இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் முடிந்து கொரோனாவிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உடனே பயன்பாட்டிற்கு வராது. இதற்கு மொத்தம் நான்கு படிநிலைகள் உள்ளது.
முதலில் விலங்குகளிடம் சோதனை செய்ய வேண்டும்.
அதன்பின் இரண்டு அல்லது மூன்று மனிதர்களிடம் சோதனை செய்ய வேண்டும்.
அதன்பின் நூறு - இருநூறு மனிதர்களிடம் சோதனை செய்ய வேண்டும்.
அதன்பின் வெவ்வேறு நாட்டை சேர்ந்த பல்லாயிரம் பேரிடம் சோதனை செய்ய வேண்டும்.
புதிய மருந்து என்பதால் கஷ்டம்
இந்த சோதனைகளில் எல்லாம் முடிவுகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அனைத்து நாட்டு மக்களுக்கும் இந்த மருந்து ஏற்றதாக இருக்க வேண்டும். அதேபோல் இதன் மூலம் பக்க விளைவுகள் எதுவும் ஏற்பட கூடாது. ஆனால் இதெல்லாம் வேகமாக நடப்பது மிகவும் கடினம். இந்த படிநிலைகள் ஒவ்வொன்றும் நடக்க பல மாதங்கள் ஆகும். இது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.
முதலில் இருந்து தொடங்க வேண்டும்
அதில் எங்காவது ஒரு புள்ளியில் சோதனை தோல்வி அடைந்தாலும் முதலில் இருந்து சோதனையை தொடங்க வேண்டும். அதனால் குறைந்தபட்சம் இந்த மருந்தை சந்தைக்கு கொண்டு வர 18 மாதங்கள் ஆகும். ஆனால் இது குறைந்தபட்ச காலம் ஆகும். உண்மையில் மருந்து பயன்பாட்டிற்கு வர இதை விட அதிக காலம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் சோதனையின் வேகத்தை பொறுத்தது.
மருந்து கிடைக்காது
மருந்து சோதனை எல்லாம் முடிந்தாலும் அதற்கு பின் ஒவ்வொரு நாட்டு அரசும் மருந்துக்கு அனுமதி அளிக்க வேண்டும். உலக சுகாதார மையம் இதை பாதுகாப்பானது என்று கூற வேண்டும். அதேபோல் உலகம் முழுக்க இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றபடி, இந்த மருந்துகளை வேகமாக உற்பத்தி செய்து, அதை மக்களின் தேவைக்கு ஏற்றபடி பிரித்து கொடுக்க வேண்டும். இதெல்லாம் மிகவும் சிரமமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.