கோஸ்ட் டவுன்.. கொரோனாவால் நிலைகுலைந்த நியூயார்க்.. 12,805 பேர் பலி.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
கொரோனா தாக்குதல் காரணமாக உலகிலேயே அமெரிக்காதான் மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கிறது.
நியூயார்க்: கொரோனா தாக்குதல் காரணமாக உலகிலேயே அமெரிக்காதான் மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கிறது.
Recommended Video
நாங்கள் கொரோனாவை வென்றுவிட்டோம். எங்கள் நாட்டில் இரண்டு பேருக்கு கொரோனா வந்தது. அவர்கள் இருவரும் குணமாகிவிட்டார்கள். அமெரிக்காவில் கொரோனா இல்லை. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
பிப்ரவரி 15ம் தேதி அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் குணப்படுத்தப்பட்ட பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய வார்த்தைகள் இவை. உலக நாடுகளும் கூட, டிரம்ப் சொல்வது சரிதான். அமெரிக்கா, கொரோனாவை வீழ்த்திவிட்டது என்றுதான் நினைத்தார்கள். ஆனால் உண்மை போக போக தெரிந்தது.
76 நாட்கள்.. முடிவிற்கு வந்தது நீண்ட லாக் டவுன்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் வுஹன்.. சீனா அதிரடி!
சீனாவை விட மோசமாக
அமெரிக்காவிற்குள் மிக மிக மெதுவாக, அதே சமயம் அமைதியாக கொரோனா வைரஸ் பரவியது. தங்கள் நாட்டிற்குள் கொரோனா பரவுவதே தெரியாத அளவிற்கு அமெரிக்க அரசு இதில் அலட்சியமாக இருந்தது. கொரோனாவிற்கு எதிராக அமெரிக்கா பெரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தொடக்க காலத்தில் அமெரிக்கா சரியாக லாக் டவுன், காண்டாக்ட் டிரேசிங் கூட செய்யவில்லை.
தோல்வி அடைந்தது
மிக மோசமான நிர்வாகம் காரணமாக அமெரிக்க அரசு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைந்து வந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த தெரியாமல் அந்நாடு திணறி வருகிறது. இது மிக மோசமான தோல்வி. அமெரிக்காவின் உண்மையான பலம் இப்போதுதான் தெரிகிறது என்று அந்நாட்டை சேர்ந்தவர்களே கூறியுள்ளனர் .மூன்றாம் உலக நாடுகளை விட மிக மோசமாக அமெரிக்காவின் நிலை உள்ளது என்று உலக நாடுகள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளது.
என்ன நிலை
கொரோனா காரணமாக அமெரிக்காவில் 395,739 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 12805 பேர் பலியாகி உள்ளனர். நேற்று அமெரிக்காவில் புதிதாக 28785 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது.அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 2011 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நியூயார்க் நிலை
அங்கு நியூயார்க்கில் மட்டும் கொரோனா காரணமாக 5489 பேர் பலியாகி உள்ளனர். 138,863 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரம் என்ற பெயரை சீனாவின் வுஹனிடம் இருந்து நியூயார்க் தட்டிப்பறித்து உள்ளது. நியூயார்க்கை ஆவிகளின் நகரம் அதாவது கோஸ்ட் டவுன் என்று அழைக்க தொடங்கி உள்ளனர்.
வேறு எங்கு
இத்தாலி, சீனா, ஸ்பெயின் ஆகிய நாடுகளை தற்போது நியூயார்க் முந்தி உள்ளது. அதற்கு அடுத்து அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் 44,416 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 1232 பேர் பலியாகி உள்ளனர். 3,585 பேர் நேற்று மட்டும் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் தாக்குதலை அமெரிக்கா சரியாக எதிர்கொள்ளாததற்கு அதிபர் டிரம்பின் அலட்சியம் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
நிலை மோசமாகும்
கொரோனாவை வென்றுவிட்டோம் என்று கூறிய அதே டிரம்ப்தான் மூன்று நாட்களுக்கு முன், மிகவும் பயங்கரமான சூழ்நிலையில் இருக்கிறோம். நாம் இதுவரை வரலாற்றில் சந்திக்காத ஒரு சூழ்நிலையை நாம் தற்போது எதிர்கொண்டு இருக்கிறோம். மிக மோசமான நாட்கள் காத்து இருக்கிறது. அடுத்த இரண்டு வாரம் மோசமாக இருக்கும். கொரோனா தாக்குதல் காரணமாக வரும் வாரங்களில் அமெரிக்கர்கள் பலர் பலியாக வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. அவர் தெரிவித்த அந்த மோசமான நாட்கள் தினமும் கண் முன்னே கடந்து கொண்டு இருக்கிறது!