தான் செய்த தவறுகள்.. பழியை தூக்கி "ஹு" மீது போடும் டிரம்ப்.. கொரோனாவிடம் தோல்வி அடைகிறதா அமெரிக்கா?
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த இரண்டு தினங்களாக உலக சுகாதார மையத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருவதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த இரண்டு தினங்களாக உலக சுகாதார மையத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருவதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது. முக்கியமாக தான் கொரோனாவிற்கு எதிராக செய்த தவறுகளை மறைக்கும் வகையில் டிரம்ப் பேச தொடங்கி உள்ளார்.
Recommended Video
எதை குடித்தால் பித்தம் தெளியும் என்ற குழப்பத்தில் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பும், அவரின் குடியரசு கட்சியும் இருக்கிறது. முதலில் கொரோனா பரவலின் தொடக்கத்தில் அதை சீன வைரஸ் என்று கடுமையாக விமர்சனம் செய்தவர்தான் டிரம்ப். முடிந்த அளவுக்கு கொரோனாவிற்கு எதிரான பழியை சீனா மீது போட பார்த்தார்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல சீனா கொரோனாவில் இருந்து வெளியே வந்தது. மாறாக அமெரிக்கா கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த சீனா உடனடியாக உலக நாடுகளுக்கு மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியது.
கொரோனா செலவுக்கு பணம் தேவை.. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய புதுச்சேரி அரசு!
சீனா மீதான விமர்சனம்
இதனால் சீனாவை கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா சமாதானம் செய்ய தொடங்கியது. சீனாவின் மருத்துவ உபகரணங்கள் தேவை என்ற நிலையில்தான் அமெரிக்கா இருக்கிறது. இதனால் சீனாவை விமர்சனம் செய்து வந்த அமெரிக்கா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சீனாவுடன் சமாதானமாக சென்றது. அதிபர் டிரம்ப் நேரடியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் கொரோனாவிற்கு உதவி கேட்கும் நிலை கூட ஏற்பட்டது.
டிரம்ப் செய்த தவறு
தொடக்கத்தில் சீனாவை விமர்சனம் செய்து வந்த டிரம்ப், தனக்கு உதவி வேண்டும் என்றதும் சீனா மீதான விமர்சனங்களை நிறுத்தினார். மாறாக கொஞ்சம் கொஞ்சமாக உலக சுகாதார மையம் மீது தனது விமர்சனங்களை திருப்பினார். கடந்த இரண்டு நாட்களாக உலக சுகாதார மையம் மீது மிக கடுமையான விமர்சனங்களை டிரம்ப் வைத்து வருகிறார். டிரம்ப் உலக சுகாதார மையத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருவதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது என்று கூறுகிறார்கள். கொரோனாவிற்கு எதிராக தான் செய்த தவறுகளை மறைக்க வேண்டுமே என்றுதான் டிரம்ப் இப்படி பேசி உள்ளார் என்கிறார்கள்.
டிரம்ப் வைத்த விமர்சனம்
- உலக சுகாதார மையம் மீது டிரம்ப் வைத்த விமர்சனங்கள் இவைதான்,
- கொரோனாவிற்கு எதிராக உலக சுகாதார மையம் பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது
- உலக சுகாதார மைய அதிகாரிகள் சீனாவை ஆதரிக்கிறார்கள். சீனாவிற்கு அந்த அமைப்பு அதிக முக்கியத்துவம் தருகிறது
- சீனா சொன்னதை அப்படியே உலக சுகாதார மையம் கேட்கிறது
- அந்த அமைப்பிற்கு நாங்கள்தான் அதிகம் செலவு செய்வது. ஆனால் எங்கள் பேச்சை கேட்கவில்லை.
- நாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்க முடிவு செய்து இருக்கிறோம்
- உலக சுகாதார மையம் மீது மிக கடுமையான நடவடிக்கையை நாங்கள் எடுக்க போகிறோம், என்று குறிப்பிட்டு இருந்தார்.
சுகாதார மையம் முடிந்ததை செய்தது
ஆனால் டிரம்ப் வைக்கும் இந்த புகார்களை அமெரிக்காவை சேர்ந்த அதிகாரிகளும், மருத்துவர்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் கூட ஏற்கவில்லை. உலக சுகாதார மையம் கொரோனாவிற்கு எதிராக மோசமாக செயல்படவில்லை. உலக சுகாதார மையம் தன்னுடைய சக்திக்கு உட்பட்டு சிறப்பாக செயல்பட்டு உள்ளது. உலக அரங்கில் தனக்கு இருக்கும் சக்திக்கு உட்பட்டு உலக சுகாதார மையம் சிறப்பாக செயல்பட்டு உள்ளது. டிரம்ப் கூற்றில் அவ்வளவு உண்மை இல்லை என்கிறார்கள்.
பெரிய அளவில் காசு இல்லை
நினைத்தவுடன் மலையை புரட்டும் அளவில் உலக சுகாதார மையத்திடம் காசு கொட்டி கிடக்கவில்லை. அதன் வருடாந்திர பட்ஜெட் 2.5 பில்லியன் டாலர் மட்டும்தான். அமெரிக்காவின் மொத்த சுகாதார பட்ஜெட்டை விட இது பல மடங்கு குறைவு. அப்படி இருக்கையில் உலகம் முழுக்க பரவி வரும் ஒரு நோயை உலக சுகாதார மையம் எப்படி கட்டுப்படுத்தும். அதிலும் கடந்த சில வாரங்கள் முன்தான் உலக சுகாதார மையம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. அமெரிக்காவை தவிர உலக சுகாதார மையத்திற்கு வேறு நாடுகள் பெரிதாக பணம் கொடுப்பது இல்லை.
எபோலா நேரம்
ஆனால் இத்தனை நிதி நெருக்கடிக்கும் இடையில் உலக சுகாதார மையம் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 2014ல் ஆப்ரிக்க நாடுகளில் எபோலாவை கட்டுப்படுத்தியது. கடந்த வருடம் கேரளாவில் நிப்பாவை கட்டுப்படுத்தியது. எச்1என்1 வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தியது என்று உலக சுகாதார மையம் சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளது. மிகப்பெரிய அளவில் செயல்படவில்லை என்றாலும் கூட, தன்னுடைய பட்ஜெட்டிற்கு ஏற்ற பணிகளை செய்துள்ளது.
தாமதமாக அறிவித்தது
உலக சுகாதர மையம் மீது டிரம்ப் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, கொரோனா குறித்து உலக சுகாதார மையம் மிகவும் தாமதமாக எச்சரித்தது. டிசம்பர் 1 சீனாவில் கொரோனா தாக்கியது. டிசம்பர் இறுதியில் தீவிரம் அடைந்தது. ஜனவரி தொடக்கத்தில் உலகம் முழுக்க கொரோனா தெரிய வந்தது. ஆனால் ஜனவரி 30ல்தான் உலக சுகாதார மையம் கொரோனா காரணமாக உலகம் முழுக்க பாதிப்பு ஏற்படலாம், இது உலக மருத்துவ எமர்ஜென்சியை உண்டாக்கும் என்று கூறியது.
இதுதான் காரணம்
அதுவரை உலக சுகாதார மையம் இது பற்றி பெரிதாக எச்சரிக்கவில்லை. ஆனால் இது உலக சுகாதார மையத்தின் தவறு இல்லை என்கிறார்கள். ஏனென்றால், உலக சுகாதார மையத்திடம் சீனா கொரோனா குறித்து எதுவும் சொல்லவில்லை. முடிந்த அளவு உலக சுகாதார மையம் கொரோனா குறித்த செய்திகளை மறைத்தது. அதோடு உலக சுகாதார மைய அதிகாரிகளை தங்கள் நாட்டுக்கு உள்ளே ஜனவரி கடைசி வாரம்தான் அனுமதித்தது.. அப்படி இருக்கும் போது சீனாவில் கொரோனா பரவல் குறித்து உறுதியாக எதுவும் தெரியாமல் எப்படி உலக சுகாதார மையம் மற்ற நாடுகளை எச்சரிக்க முடியும்.
டிரம்பும் இதைத்தான் செய்தார்
சரியாக சொல்லவேண்டும் என்றால் டிரம்ப்தான் கொரோனா விஷயத்தில் அசட்டையாக இருந்தார். ஜனவரி இறுதியில் உலக சுகாதார மையம் உலக நாடுகளை எச்சரித்தும் கூட கொரோனாவிற்கு எதிராக டிரம்ப் எதுவும் செய்யவில்லை. இரண்டு நோயாளிகளை குணப்படுத்திவிட்டு, கொரோனாவை நாங்கள் வென்றுவிட்டோம் என்று கூறினார். அதோடு கொரோனாவை கட்டுப்படுத்த டிரம்ப் பெரிய அளவில் முயற்சிகள் எதையும் செய்யவில்லை. காண்டாக்ட் டிரேசிங் கூட அமெரிக்கா செய்யவில்லை.
ஹுவிற்கு அதிகாரம் இல்லை
அதன்பின் கொரோனா அமெரிக்காவில் வேகம் எடுத்த போதும் கூட டிரம்ப் மிக மெதுவாக செயல்பட்டார். முக்கியமாக அமெரிக்காவிற்கு உள்ளே வரும் விமானங்களை மிக தாமதமாக தடை செய்தார். மார்ச் வரை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு விமானங்கள் சென்று கொண்டுதான் இருந்தது. 3200 விமானங்கள் வரை டிசம்பர் - மார்ச் மாதத்தில் சீனாவில் இருந்து அமெரிக்கா சென்றுள்ளது.
மிக தாமதமாக செய்தார்
இது எதையும் டிரம்ப் தடுக்கவில்லை. மிக தாமதமாகவே டிரம்ப் இதில் நடவடிக்கை எடுத்தார். தன்னுடைய இந்த தவறை மறைக்க வேண்டும் என்பதற்காக உலக சுகாதார மையம் டிராவல் தடையை அறிவிக்கவில்லை என்று உலக சுகாதார மையம் மீது பழியை போடுகிறார். ஆனால் உண்மையில் உலக சுகாதார மையத்தால் மற்ற நாடுகளின் போக்குவரத்து துறை மீது தலையிட்டு தடைகளை விதிக்க முடியாது. அந்த அமைப்பிற்கு இவ்வளவு அதிகாரம் இல்லை.
சீனாவை பாராட்டியது உண்மைதான்
உலக சுகாதார மையம் கொஞ்சம் சீனாவை பாராட்டியது உண்மைதான். ஜி ஜின்பிங்கை உலக சுகாதார மையம் பாராட்டியது. ஏனென்றால் அப்போதுதான் சீனாவில் சென்று உலக சுகாதார மையம் ஆராய்ச்சி செய்ய முடியும். சீனாவை விமர்சனம் செய்தால் உலக சுகாதார மையத்திற்கு அந்நாடு ஒத்துழைப்பு வழங்காது என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். சீனாவிடம் உலக சுகாதார மையம் இறங்கி போனது ஒரு டிப்ளமேட்டிக் மூவ் என்றுதான் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஹு பாவம்
உலக அணு சக்தி அமைப்பு போல உலக சுகாதார மையம் பலம் வாய்ந்த அமைப்பு இல்லை. உலக நாடுகள் அணு ஆயுத சோதனை செய்தால் அவர்களால் அந்த நாடு மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் எங்காவது நோய் பரவினால் அந்த நாடுகள் மீது உலக சுகாதார மையத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது.உலக சுகாதார மையம் சீனாவிடம் கொஞ்சம் அடங்கிப் போனதற்கு காரணம் இதுதான்.
தவறை மறைக்கும் டிரம்ப்
இப்படி உலக சுகாதார மையம் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறது. ஆனால் சரியாக லாக் டவுன் அறிவிப்பை வெளியிடாத, கொரோனாவிற்கு எதிராக சரியான திட்டங்களை அறிவிக்காத டிரம்ப் தனது தவறை மறைக்க பழியை உலக சுகாதார மையம் மீது தூக்கி போட்டு இருக்கிறார். கொரோனாவிடம் தோல்வி அடைய தொடங்கி இருக்கும் அமெரிக்கா , அந்த பழியை சுமக்க ஆட்களை தேடி வந்தது.. இதில் சீனா அமெரிக்காவிடம் மாட்டவில்லை .. தற்போது அமெரிக்காவிற்கு கிடைத்து இருக்கும் கிடா ஆடுதான் உலக சுகாதார மையம்!