வீடியோ கால் செய்து சொன்னார்கள்.. 3700 பேர் பணியிலிருந்து நீக்கம்.. உஃபர் நிறுவனம் ஷாக் நடவடிக்கை!
நியூயார்க்: பிரபல கால் டாக்சி மற்றும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான உஃபர் நிறுவனம் தங்கள் அமெரிக்க கிளைகளில் பணி புரியும் 3700 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இவர்கள் எல்லோரையும் வெறும் வீடியோ கால் மூலம் நீக்கி உள்ளது.
உலகம் முழுக்க கொரோனா காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக டிராவல்ஸ் துறை மற்றும் சுற்றுலா துறை பாதிக்கப்பட்டுள்ளது. ஓலா, உஃபர் போன்ற நிறுவனங்கள் லாக் டவுன் காரணமாக பல கோடிகளை இழந்துள்ளது.
இதனால் உஃபர் நிறுவனம் தற்போது தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நபர்களை பணியில் இருந்து நீக்க தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் அங்கு பெரிய அளவில் பணி நீக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவர்களை குழப்பும் ஒரு விஷயம்.. மிக மோசமான நிலையில் நியூயார்க்.. அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
உஃபர் நிறுவனம்நீக்கம்
அந்த வகையில் உஃபர் நிறுவனம் தங்கள் அமெரிக்க கிளைகளில் பணி புரியும் 3700 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இவர்கள் எல்லோரையும் வெறும் வீடியோ கால் மூலம் நீக்கி உள்ளது. ZOOM வீடியோ கால் செயலி மூலம் இவர்களை எல்லாம் பணியில் இருந்து உஃபர் நீக்கி உள்ளது. அந்த நிறுவனத்தின் பணியாளர் குழு தலைவர் ரூஃப்பின் சவாலே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பெரிய அளவில் வருத்தம்
அவர் தனது வீடியோ காலில், நம்முடைய வியாபாரம் இந்த ஊரடங்கு காரணமாக மொத்தமாக முடங்கி உள்ளது. நாம் பெரிய இழப்பை சந்தித்து இருக்கிறோம். நமது கஸ்டமர் கேர் ஊழியர்கள் யாருக்கும் வேலை இல்லை. நமக்கும் வருமானம் வருவது இல்லை. அதனால் கஸ்டமர் கேர் ஊழியர்கள் உட்பட மொத்தம் 3700 பேர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். ஓட்டுனர்கள் யாரும் நீக்கப்படவில்லை.
சம்பளம் வரும்
நீங்கள் இதுவரை செய்த பணிக்கான சம்பளம் உங்களுக்கு வழங்கப்படும். வீடியோ கால் மூலம் சொல்ல கஷ்டமாக இருக்கிறது. யாரும் இதை விரும்ப மாட்டார்கள்தான். உங்களின் நிலை எங்களுக்கு புரிகிறது. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர் கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் கசிந்து பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
எத்தனை ஊழியர்கள்
உலகம் முழுக்க உஃபர் நிறுவனத்திற்கு இருக்கும் 26900 ஊழியர்களில் 14% பேர் அதாவது 3700 பேர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இதற்கு முன் கடந்த பிப்ரவரியில் அங்கு 80 ஊழியர்கள் முதல் கட்டமாக நீக்கப்பட்டனர். உஃபர் நிறுவனத்திற்கு இந்த வருட தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 2.9 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
தொடரும் பணி நீக்கம்
இதனால்தான் அங்கு பணி நீக்கம் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனத்தின் சிஇஓ தாரா கோஷ்ரோஷாகி இந்த வருடம் முழுக்க இனி சம்பளம் வாங்காமல் வேலை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் வருமானம் 1 மில்லியன் டாலர் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவரின் வருமானம் நீக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இன்னும் பல பணியாளர்களை நீக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.