கொரோனா: உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பு- ஒரே நாளில் 237 பேர் பலி
நியூயார்க்: கொரோனா தொற்று நோய் பாதிப்பில் உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 237 பேர் உயிரிழந்துள்ளனர்
Recommended Video
சீனாவில் இருந்து புறப்பட்ட கொரோனா தொற்று நோய் உலகின் 190 நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் தொற்று நோயாக கொரோனா உருவெடுத்து நிற்கிறது.
சீனாவை தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனாவால் அமெரிக்காதான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் சுமார் 85,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 81,782 பேரும் இத்தாலியிலும் 80,500 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 237 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை மொத்தம் 1,186 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில்தான் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நகரத்தில் இதுவரை 385 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் நகரில் நேற்று ஒரே நாளில் 100க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.