இத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்?
கொரோனா இதே வேகத்தில் தாக்கினால் அமெரிக்கா விரைவில் இத்தாலி, ஸ்பெயின் இரண்டு நாடுகளையும் முந்தும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: கொரோனா இதே வேகத்தில் தாக்கினால் அமெரிக்கா விரைவில் இத்தாலி, ஸ்பெயின் இரண்டு நாடுகளையும் முந்தும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
சைனீஸ் வைரஸ்.. இதுதான் கொரோனா வைரசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வைத்த பெயர். சீனாவில் கொரோனா வைரஸ் வந்ததில் இருந்தே சீனாவை மிக மோசமாக விமர்சனம் செய்து வந்தவர்தான் டிரம்ப். சீனாவிற்கு கொரோனாவை கட்டுப்படுத்த தெரியவில்லை.
நாங்கள் என்றால் கொரோனவை எளிதாக வென்று இருப்போம் என்று கூறினார். ஆனால் தற்போது அதே அமெரிக்காதான் சீனாவை விட மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 27ஆக உயர்வு
அமெரிக்கா நிலை என்ன
கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தற்போது அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 68,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் அங்கு வெறும் 80 பேர்தான் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருந்தனர் . மாதம்முடிவதற்குள் தற்போது அங்கு 60 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 1,036 பேர் பலியாகி உள்ளனர். இன்று மட்டும் 9 பேர் பலியாகி உள்ளனர்,
மாகாணங்கள் எப்படி
அமெரிக்காவில் நியூயார்க்கில்தான் அதிக பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 33,013 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 366 பேர் பலியாகி உள்ளனர். அடுத்து நியூ ஜெர்சியில் 4,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு பலி எண்ணிக்கை 62 ஆகும். அதேபோல் கலிபோர்னியாவில் 3,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 67 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளை மாளிகை இருக்கும் வாஷிங்க்டனில் 2,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 132 பேர் பலியாகி உள்ளனர்.
பொருளாதரம் சரிகிறது
இந்த கொரோனா காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்து வருகிறது. இந்த மாத இறுதியில் அங்கு 1 மில்லியன் மக்கள் கலிபோர்னியாவில் மட்டும் வேலையை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் தினமும் பணிக்கு செல்லும் நபர்களில் பாதிக்கு பாதி பேர் நியூயார்க்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தினமும் மார்க்கெட் மிக மோசமான சரிவை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பொருளாதார ரீதியாக சீனாவை விட அமெரிக்காதான் மோசமாக இருக்கிறது.
சீனாவை விட நிலைமை மோசம்
தற்போது கொரோனா பாதிப்பை எடுத்துக் கொண்டால், சீனாவை விட மோசமான நிலையை அமெரிக்கா சந்தித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளுக்கு சராசரியாக 800 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இது சீனாவை விட குறைவு. சீனாவில் ஒரு நாளுக்கு அதிகமாக 40 பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் இத்தாலியில் ஒரு நாளுக்கு 6,000 பேர் வரை பாதிக்கிறார்கள். சீனா, இத்தாலியில் இது குறைகிறது, ஆனால் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.
மருத்துவர்கள் சரியானவர்களாக இல்லை
இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அங்கு 428 பேர்தான் இதில் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இது மற்ற நாடுகளை விட மிகவும் குறைவு ஆகும். இதற்கு காரணமாக அமெரிக்காவின் மோசாமான சுகாதார கொள்கைதான் என்கிறார்கள். வெளியே வல்லரசு நாடு என்று சொல்லிக்கொண்டு திரிந்தாலும், அந்த நாட்டின் சிஸ்டத்தில், முக்கியமாக மருத்துவ சிஸ்டத்தில் நிறைய குறைகள் உள்ளது. இதுதான் அங்கு கொரோனாவால் பலிகள் அதிகரிக்க காரணம் ஆகும்.
ராணுவம் நிதி
அமெரிக்கா ராணுவத்திற்கும் அது தொடர்பான ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய நிதியில் பாதியை கூட பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கவில்லை. இதுதான் அங்கு தற்போது கொரோனா சமயத்தில் எதிரொலித்துள்ளது. அங்கு கொரோனா காரணமாக மருத்துவனையில் ஒரே ஒரு பெட்டிற்கு 7 பேர் போட்டியிடும் நிலை உள்ளது. அடுத்த மாதம் இது எட்டாக உயரும் என்று கூறுகிறார்கள். அங்கு கொரோனா காரணமாக இதுவரை 18 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்.
டிரம்பிற்கு என்ன சிக்கல்
இதெல்லாம் சேர்த்து டிரம்பிற்கு சிக்கல் மேல் சிக்கலாக மாறியுள்ளது. கொரோனாவை குறைத்து மதிப்பிட்டது , தற்போது அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுவது. கொரோனாவிற்கு எதிராக நாட்டை தயார் செய்யாதது. இப்போதும் முழு ஊரடங்கை பிறப்பிக்காதது. ஈஸ்டர் வந்தால் கொரோனா சரியாகும் என்று உளறியது என்று டிரம்ப் தற்போது தொட்டதெல்லாம் சர்ச்சையாக முடிகிறது.
சீனாவுடன் மோதல்
இதெல்லாம் போக சீனாவை வேறு தேவையில்லாத நேரத்தில் டிரம்ப் எதிர்த்து வருகிறார். கொரோனா குறித்து எல்லோரையும் விட சீனர்களுக்குத்தான் அதிகம் தெரியும். அவர்களின் உதவி இப்போது அவசியம். உலகமே ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில், சீனாவை மிக மோசமாக பகைக்க தொடங்கி இருக்கிறார் டிரம்ப். அமெரிக்காவின் சரியும் பொருளாதாரத்தில் இதில் மேலும் எண்ணெய்யை ஊற்றி இருக்கிறது.
உலக சுகாதார மையம் என்ன சொன்னது
இந்த நிலையில்தான் இதே வேகத்தில் அமெரிக்காவில் கொரோனா பரவினால் அங்கு பலி எண்ணிக்கை அதிகரிக்கும். இத்தாலி தொடக்கத்தில் இருந்தது போல அமெரிக்கா இப்போது மாறியுள்ளது . அமெரிக்காவில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. இப்படியே போனால் சீனாவை, இத்தாலியை அமெரிக்கா எளிதாக முந்த வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையத்தின் செய்தி தொடர்பாளர் ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.