"எமர்ஜென்சி ஒப்புதல்".. களமிறங்கும் ஃபைசர் கொரோனா வேக்சின்.. ஆனால்.. இந்தியாவிற்கு வருவதில் சிக்கல்!
நியூயார்க்: அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் சின்ன சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு கொண்டு வந்தாலும், மக்களிடம் மருந்தை விநியோகிப்பது மிகப்பெரிய சவாலான காரியம் ஆகும்.
அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இன்னும் 45 நாட்களில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் வருகிறது. அதாவது கிறிஸ்மஸுக்கு முன்பாக இந்த மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறுகிறார்கள்.
கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 94.5% வெற்றிபெற்ற நிலையில், தற்போது ஃபைசர் நிறுவனமும் கொரோனா சோதனையில் 95% வெற்றிபெற்றுள்ளது.
பைஃசர்- பயோன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்.. உலகில் முதல் நாடு
வெற்றி
அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனம் இணைந்து இந்த வேக்சினை உருவாக்கி உள்ளது. 43000 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஃபைசர் வேக்சின் போடப்பட்ட நபர்களில் 8 பேருக்கு மட்டுமே கொரோனா வந்துள்ளது. இதனால் ஃபைசர் நிறுவனத்தின் மருந்து மிகவும் பாதுகாப்பானது என்று உறுதியாகி உள்ளது.
எப்படி
இந்த மருந்திற்கு அவசர ஒப்புதல் வாங்குவதற்கு ஃபைசர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு பெரிய அளவில் பின்விளைவுகளும் இல்லை. வரும் கிறிஸ்மஸ் தினத்திற்குள் இந்த மருந்துக்கு ஒப்புதல் பெற அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. நாளை இதற்கான விண்ணப்பத்தை அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் ஃபைசர் நிறுவனம் அளிக்க உள்ளது. அதன்பின் 50 மில்லியன் மருந்துகளை தயாரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏற்றுமதி
இந்த நிறுவனத்தின் மருந்தை வாங்க பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளது. இந்தியாவும் கூட ஃபைசர் நிறுவனத்தின் மருந்துகளை வாங்க ஆலோசனைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஃபைசர் கொரோனா வேக்சின் இந்தியாவிற்கு கிடைக்காமலே கூட போகலாம் என்று கூறுகிறார்கள். இந்த மருந்தின் குணாதிசயம் காரணமாக இதை இந்தியா வாங்காமலே போகலாம் என்கிறார்கள்.
ஏன்
இந்த ஃபைசர் கொரோனா வேக்சினை -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்க வேண்டும். அப்போதுதான் இதை மக்களுக்கு அளிக்க முடியும். இந்தியா போன்ற பெரிய நாட்டில், மக்களுக்கு வேக்சின் கொடுக்க வேண்டும் என்றால் பெரிய பெரிய முகாம்களை அமைக்க வேண்டும். இங்கெல்லாம் -70 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் ஃபைசர் மருந்தை வைத்து இருப்பது என்பது அசாத்தியமான காரியம்.
கஷ்டம்
கிராமங்களில் இந்த மருந்துகளை கொண்டு செல்வது மிகவும் கடினமான விஷயம். போலியோ வேக்சின் போல அவ்வளவு எளிதாக இதை ஊர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாது. இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகளில் இந்த ஃபைசர் வேக்சின் அமலுக்கு வருமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலாக மாடர்னா வேக்சின், ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா வேக்சின் ஆகியவை இன்னும் நல்ல வெப்பநிலையில் வைக்க முடியும்.
செலவு குறைவு
இதை பராமரிக்கும் செலவும் குறைவு. ஒரு பக்கம் ஃபைசர் நிறுவனத்துடன் இந்தியா ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலும் இந்தியா ஃபைசர் வேக்சினை கொள்முதல் செய்ய விரும்பாது என்று கூறுகிறார்கள். இதற்கு பதிலாக மாடர்னா போன்ற நிறுவங்களின் வேக்சினை இந்தியா அணுகவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.