மிக குறைந்த விலை.. அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் சொன்ன குட்நியூஸ்.. கம்மி ரேட்டில் கொரோனா வேக்சின்
நியூயார்க்: கொரோனாவிற்கு எதிராக அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் உருவாக்கி இருக்கும் தடுப்பு மருந்து 10-50 டாலருக்கு கிடைக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்க அரசின் நேரடி உதவியுடன் மாடர்னா நிறுவனம் உருவாக்கி இருக்கும் வேக்சின் 94.5 சதவிகிதம் தடுப்பு ஆற்றல் கொண்டு இருப்பதாக முடிவுகள் வெளியாகி உள்ளது.
மூன்றாம் கட்ட மனித சோதனைக்கு 30000 பேரை மாடர்னா நிறுவனம் உட்படுத்தியது. இந்த சோதனையின் முடிவில் இந்த மருந்தின் நோய் தடுப்பாற்றல் 94.5% என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வல்லரசு நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்.. ஸ்தம்பித்த உலக பொருளாதாரம்.. கிலி கிளப்பும் 2020!
முடிவுகள்
மூன்று கட்ட மனித சோதனைக்கு பின் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் மாடர்னா ஐஎன்சி (Moderna) நிறுவனத்துடன் அமெரிக்க அரசு இணைந்து இந்த தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. மாடர்னா நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த வேக்சினுக்கு Cove என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு வேகமாக அனுமதி வாங்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அனுமதி
மாடர்னா நிறுவனத்தின் இந்த வேக்சின் விலை 10- 50 டாலருக்கு கிடைக்கும் என்று மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஃப்ளூ காய்ச்சலுக்கு வழங்கப்படும் தடுப்பு மருந்துகளின் விலை 10-50 டாலருக்கு இருக்கும். அதே விலையில் மாடர்னா மருந்தும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பா
இதற்காக ஐரோப்பா அரசுடன் மாடர்னா நிறுவனம் ஒப்பந்தம் செய்ய உள்ளது. ஒரு மாடர்னா வேக்சின் டோஸ் விலை 25-37 டாலருக்கு ஐரோப்பாவில் கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. விரைவில் இதற்கான ஒப்பந்தம் முழுமையாக செய்யப்படும். ஐரோப்பாவில் மருந்துக்கு அனுமதி கிடைத்ததும் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டடுள்ளது.
எப்படி
பொதுவாக ஐரோப்பாவில் மருந்து கிடைக்கும் அதே விலையில்தான் கிட்டதட்ட இந்தியாவிலும் கிடைக்கும். இதனால் இந்தியாவில் இந்த மருந்தின் விலை 700 ரூபாயில் இருந்து 3500 ரூபாய்க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்தை இந்தியா வாங்க திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.