ரூ.7400 கோடி.. 30,000 பேருக்கு ஒரே அடியாக சோதனை.. அமெரிக்கா களமிறக்கும் வேக்சின்.. செம பிளான்!
நியூயார்க்: கொரோனாவிற்கு எதிராக அமெரிக்கா சொந்தமாக உருவாக்கி வரும் தடுப்பு வேக்சின் ஒன்று தற்போது இறுதிக்கட்ட மனித சோதனைக்கு சென்றுள்ளது. அமெரிக்க அரசுடன் மாடர்னா நிறுவனம் சேர்ந்து உருவாக்கி இருக்கும் இந்த வேக்சினை 30 ஆயிரம் பேர் மீது சோதனை செய்ய உள்ளனர். இந்த குறிப்பிட்ட வேக்சின் மற்ற மருந்துகளை விட கொஞ்சம் வித்தியாசமானது என்று அமெரிக்கா கூறியுள்ளது!
உலகம் முழுக்க 120 நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு உள்ளது.
ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளது.
பார்சி சமுதாயத்துக்கு 60,000 கொரோனா தடுப்பு ஊசி...சைரஸ் ஒப்புதல்!!
தடுப்பு மருந்து
இந்தநிலையில் இன்னொரு பக்கம் அமெரிக்காவும் சுயமாக கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அதிலும் அமெரிக்காவின் மாடர்னா ஐஎன்சி (Moderna) நிறுவனத்துடன் அமெரிக்க அரசு இணைந்து உருவாக்கி வரும் தடுப்பு மருந்து உலகிலேயே அதிக பேரிடம் சோதனை செய்யப்பட கூடிய கொரோனா தடுப்பு மருந்தாக மாறியுள்ளது. மாடர்னா வேக்சின் ஆராய்ச்சிதான் கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியிலேயே மிகப்பெரிய ஆராய்ச்சி ஆகும்.
மாடர்னா எப்படி
மாடர்னா நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த வேக்சினுக்கு Cove என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வேக்சின் தற்போது மூன்றாம் கட்ட மனித சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் "Operation Warp Speed'' என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் முதல் வேக்சின் இது ஆகும். விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தில் அமெரிக்கா இந்த மருந்தை ஆராய்ச்சி செய்து வருகிறது.
கடைசி கட்டம்
இதில் மூன்றாம் கட்ட மனித சோதனைக்காக 472 மில்லியன் டாலரை அமெரிக்கா செலவு செய்ய இருக்கிறது. இந்த நிதியை இன்றுதான் மாடர்னா நிறுவனத்திற்கு அமெரிக்கா அரசு ஒதுக்கி உள்ளது. முன்னதாக 530 மில்லியன் டாலர் ரூபாயை அமெரிக்கா அந்த நிறுவனத்திற்கு ஒதுக்கியது. இதன் மூலம் மொத்தமாக 1 பில்லியன் டாலரை அமெரிக்க அரசு மாடர்னாவிற்கு ஒதுக்கி உள்ளது.
எத்தனை பேர்
இதில் மூன்றாம் கட்ட மனித சோதனைக்கு 30000 பேரை மாடர்னா நிறுவனம் உட்படுத்துகிறது. இந்த 30 ஆயிரம் பேரில் 15000 பேருக்கு 100 மைக்ரோ கிராம் டோஸ் கொடுக்கப்பட உள்ளது. மற்ற 15000 பேருக்கு வெறும் தடுப்பு மருந்து இல்லாத சாதாரண ஊட்டச்சத்து ஊசியை போட இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் தொடர்பு படுத்தி, cove மருந்து எப்படி வேலை செய்கிறது என்று கண்டுபிடிக்க போகிறார்கள்.
ஒப்பீடு செய்வார்கள்
அதாவது மருந்து கொடுத்தவர்கள், கொடுக்கப்படாதவர்கள் எல்லோரையும் ஒன்றாக ஒப்பிட்டு சோதனை செய்ய இருக்கிறார்கள். மொத்தம் 500 மில்லியன் மருந்துகளை அடுத்த வருடம் மக்களுக்காக மாடர்னா உருவாக்க திட்டமிட்டுள்ளது. வருட இறுதிக்குள் 1 பில்லியன் மருந்துகளை உருவாக்க உள்ளனர். மாடர்னா மருந்தின் முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
வித்தியாசம்
முதல்கட்டமாக 45 பேரிடம் இந்த சோதனை செய்யப்பட்டது. இதில் எல்லோருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாடர்னா மருந்து எம்ஆர்என்ஏ முறைப்படி செயல்படும் மருந்து ஆகும். உடலில் எம்ஆர்என்ஏ மூலம் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை செலுத்த உள்ளனர். தற்போது உருவாக்கப்பட்டு வரும் வேக்சின்களில் மனித சோதனைக்கு சென்று இருக்கும் ஒரே எம்ஆர்என்ஏ மருந்து இது மட்டுமே.. இதனால்தான் இந்த குறிப்பிட்ட வேக்சின் மற்ற மருந்துகளை விட கொஞ்சம் வித்தியாசமானது என்று அமெரிக்கா கூறியுள்ளது!