2வது வேக்சினை களமிறக்கும் அமெரிக்கா.. கொரோனா வேக்சின் 95% வெற்றி.. ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு
நியூயார்க்: 3ம் கட்ட கொரோனா வேக்சின் சோதனை நம்பிக்கை அளிக்கிறது, கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்று விட்டது என்று அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுக்க கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிரமான சோதனைகள் நடந்து வருகிறது. ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா தடுப்பு மருந்து, மாடர்னா தடுப்பு மருந்து, இந்தியாவின் பாரத் பயோடெக் மருந்து என்று முக்கியமான மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயோ என் டெக் நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதன் மூன்றாம் கட்ட சோதனை முடிந்துள்ளது.
பைஃசர்- பயோன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்.. உலகில் முதல் நாடு
எப்படி
இந்த நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொரோனா தடுப்பு மருந்துக்கு BNT162b2 என்று தற்போது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூன்றாம் கட்ட முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் இந்த மருந்துக்கு 90% தடுப்பாற்றல் இருப்பதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்து இருந்தது. தற்போது புதிய ஆய்வு முடிவுகளை ஃபைசர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மாற்றியது
அதன்படி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றுவிட்டது. இதற்கு 95% தடுப்பாற்றல் உள்ளது, 65 வயதுக்கு மேல் உள்ள நபர்களிடம் 94% தடுப்பாற்றல் உள்ளது என்று ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மருந்தின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டு 28 நாட்களில் கொரோனா தடுப்பாற்றல் கிடைக்கிறது. இரண்டாவது டோஸ் கொடுத்து 7 நாட்களில் கொரோனா தடுப்பாற்றல் கிடைக்கிறது என்று ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனுமதி
இந்த தடுப்பு மருந்திற்கு அவசர அனுமதி பெற போவதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஃபைசர் பயோ என் டெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்து சோதனை 43 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்டது. இதில் சிலருக்கு உண்மையான தடுப்பு மருந்தும், சிலருக்கு சத்து ஊசியும் போடப்பட்டு யாருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்று ஒப்பீடு செய்யப்பட்டது.
எத்தனை பேர்
இதில் சத்து மருந்து மட்டும் எடுத்துக் கொண்டவர்களுக்கு 162 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தடுப்பு மருந்து போடப்பட்டவர்களில் 8 பேருக்கு மட்டுமே கொரோனா வந்துள்ளது. இந்த தடுப்பு மருந்து போட்டவர்களில் யாருக்கும் பெரிதாக பக்க விளைவுகள் இல்லை. சாதாரண தடுப்பூசியால் ஏற்படும் லேசான காய்ச்சல் போன்ற பக்க விளைவுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
சிக்கல்
இதற்கு விரைவில் அனுமதி வாங்க ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த மருந்தை -70 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏழை நாடுகளில் இந்த மருந்தை பயன்படுத்தும் வசதி இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 94.5 சதவிகிதம் தடுப்பு ஆற்றல் கொண்டு இருப்பதாக முடிவுகள் வெளியான நிலையில் அமெரிக்காவில் இன்னொரு வேக்சின் முடிவுகளும் வெளியாகி உள்ளது.