சேமிப்பு பணத்தை புயல் நிவாரணத்திற்காக தந்த சிறுவன்.. டிஸ்னி தந்த சர்ப்பிரைஸ் பரிசு!
நியூயார்க்: புளோரிடாவில் தனது சேமிப்பு பணத்தை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய சிறுவனை கவுரவப்படுத்தியுள்ளது டிஸ்னி நிறுவனம்.
இந்த காலத்தில் பெருந்தன்மைக்கு மரியாதையே இல்லை என நினைப்பவர்கள் நிச்சயம் ஜெர்மைன் பெல்லின் கதையை படித்தே ஆக வேண்டும்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன்வில்லேவை சேர்ந்த 7 வயது சிறுவன் தான் ஜெர்மைன் பெல். கடந்த ஒரு வருடமாக தனக்கு கிடைக்கும் காசை தனது உண்டியலில் சேமித்து வந்தான். எதற்கு தெரியுமா? வால்ட் டிஸ்னியின் உலக ரிசார்ட்டுக்கு போக வேண்டும் என்பதற்காக.
ஆனால் கடைசி நிமிடத்தில் தனது மனதை மாற்றிக்கொண்டான் பெல். தனது சேமிப்பு பணத்தை பஹாமாசில் உள்ள ஹரிக்கேன் டோரியனில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக கொடுத்து விட்டான். டிஸ்னி லேண்டுக்கு போவதற்கு பதிலாக தெற்கு கரோலினா சென்று அந்த மக்களுக்கு உதவியிருக்கிறான் பெல்.
"ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் மக்களுக்கு, உணவு வழங்க வேண்டும் என எனக்கு தோன்றியது. அதன் காரணமாக இங்கு வந்து உணவு வழங்கி வந்தேன்", என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறான் அந்த சிறுவன். தனது சொந்த விருப்பத்தை துறந்து, மற்றவர்களுக்காக தான் சேமித்து வைத்த பணத்தை கொடுத்த பெல்லின் பெருந்தன்மையை பாராட்டாத ஆட்களே இல்லை.
இதில் டிஸ்னியும் சேர்ந்து கொண்டது. ஜெர்மைன் பெல் மற்றம் அவனது குடும்பத்தினரை டிஸ்னி வேர்ல்டுக்கு அழைத்து சென்று விஐபி போல் நடத்தி, அந்த சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்திருக்கிறது டிஸ்னி. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கும் உள்ளம் தான் கடவுள். அதை உடையவர்கள் எப்போதும் வீழ்வதில்லை. அதற்கு இந்த சிறுவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.