அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 130 பேர் கைது... போலி விசா மூலம் படிக்க சென்றனர்
நியூயார்க்: அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 130 பேர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இதில், குறிப்பாக இந்தியர்கள் பெருமளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அமெரிக்காவில் படிக்க, போலி விசாவில் மாணவர்கள் எவ்வாறு வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
600 மாணவர்கள் பதிவு
அதன்படி, மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் பல்கலைக் கழகம் என்ற பெயரில் போலி பல்கலைக் கழகத்தை போலீசார் ரகசியமாக உருவாக்கினர். மேலும், மாணவர்கள் சேர்க்கைக்காக விளம்பரம் செய்யப்பட்டது. அதில், சேர 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
ஏஜெண்டுகள்
இதற்காக அமெரிக்காவில் வசிக்கும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த ஏஜெண்டுகள் அணுகி போலி விசா பெற்று மாணவர்களை அனுப்பி வைத்தனர்.
ரூ. 6 லட்சம் வசூல்
பல்கலைக் கழகத்தில் பயிற்றுவதாகக் கூறி, 5 ஆயிரம் டாலரில் இருந்து 20 ஆயிரம் டாலர் வரை ( ரூ. 6 லட்சம் வரை ) கமிஷன் வாங்கிக் கொண்டு எப்1 என்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி விசா பெற்றதை அமெரிக்க போலீசார் கண்டறிந்தனர்.
மாணவர்கள் கைது
படித்துக் கொண்டு பல்வேறு இடங்களில் பகுதி நேரமாக பணியாற்றி வந்த 100 மாணவர்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், போலி விசா கொடுத்து ஏமாற்றிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலி விசாவில் அமெரிக்காவில்மற்ற மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெற்றோர் வேதனை
பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மத்திய அரசிடம் முறையிட்டு மாணவர்களை காப்பாற்றும்படி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில், இந்திய தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.