"ஆன்டிபா" தான் காரணம்.. ஆளுநர்கள் என்ன செய்கிறீர்கள்.. ராணுவத்தை இறக்க போறேன்.. டிரம்ப் கொக்கரிப்பு
ராணுவத்தை இறக்கிவிடுவேன்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்
நியூயார்க்: "ஆன்டிபா' என்ற குழு இடதுசாரி கொள்கை உடையதாகவும்... அது அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும்.. இவர்களே போராட்டங்களை தூண்டுவதாகவும்... அதனால் அதனை அதை பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்க போவதாகவும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதுமட்டுமில்லை.. "ஆளுநர்களும், மேயர்களும், கலவரத்தை உடனே கட்டுக்குள் கொண்டு வந்து மக்களின் உயிர்களை காக்காவி்ட்டால் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை இறக்கிவிடுவேன் என்றும் கொஞ்ச நேரத்தில் அமைதியை கொண்டுவந்துவிடுவேன்" என்றும் அதிபர் டிரம்ப் கொக்கரித்துள்ளார்!
Recommended Video
கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவரை அமெரிக்க போலீஸ் ஒருவர், கடந்த வாரம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்.
அப்போது ஜார்ஜை தரையில் அமுக்கி, அவருடைய கழுத்தின் மேல், தன்னுடைய தன் கால் முட்டியால் அழுத்தியுள்ளார்... இதில்தான் மூச்சு திணறி ஜார்ஜ் உயிரிழந்துவிட்டார்.. இந்த வீடியோ வெளியாகி மக்களிடையே கொதிப்புணர்வு ஏற்பட்டது.
வன்முறை
இச்செயலை கண்டித்து அங்கு உள்நாட்டு போராட்டமும் வெடித்துள்ளது.. 50 மாகாணங்கள், 140 நகரங்கள் என மொத்த இடமும் போராட்டமும், வன்முறையும் வெடித்ததை யாரும் எதிர்பார்க்கவே இல்லை.. இதில் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்ட, 26 மாகாணங்களில், நேஷனல் கார்டு எனப்படும் அதிரடி படையினர் உடனடியாக குவிக்கப்பட்டனர். இதைதவிர, நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, ஹூஸ்டன், ஃபிலடெல்பியா என்று 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மார்ட்டின் லூதர் கிங்
இதையெல்லாம் பார்த்தால், 1968ல்-ல் நடந்த போராட்டங்கள் போலவே இருப்பதாக சொல்கிறார்கள்.. அப்போது, கறுப்பினத் தலைவரான, மார்ட்டின் லுாதர் கிங் கொல்லப்பட்டபோது, அமெரிக்காவில் இதுபோலதான் பெரிய அளவில் வன்முறைகள் தாண்டவமாடின.. போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.. மார்ட்டின் லூதர் கிங்-க்கு பிறகு இப்போதுதான், கறுப்பின மக்களின் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கோபாவேசம்
இந்த 6 நாள் நடந்து முடிந்த வன்முறை போராட்டத்தில் 5 பேர் இறந்திருக்கிறார்கள்.. 2,564 பேர் கைதாகி உள்ளனர்.. ஆனாலும் மக்களின் கோபாவேசம் குறையவில்லை.. கொதிப்பும் அடங்கவில்லை.. பிலடெல்பியாவில் நிலைமை இன்னமும் மோசம்.. போலீசார் எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும், மக்களை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும்தான் அவர்களை கலைக்க முயன்று வருகின்றனர்.. சில இடங்களில் மிளகு பொடியை கூட மக்கள் மீது தூவினார்களாம் போலீஸ்!
வெள்ளை மாளிகை
ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த இந்த போராட்டம், டிரம்ப் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகேயும் நடந்தது.. திடீரென ஆயிரக் கணக்கானோர் கூடிவிட்டனர்.. இதனால் வெள்ளை மாளிகையில் உள்ள பதுங்கு குழியில், அதிபர் கொஞ்ச நேரம் பதுங்கியிருந்ததாக செய்திகள் கூறுகின்றன. அவருடைய மனைவி மெலினாவும், மகனும்கூட பதுங்கு குழியில் பாதுகாப்புக்காக பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்திகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை தந்த சமயத்தில்தான், டிரம்ப் ஒரு விளக்கத்தை காட்டமாக தந்தார்.
ஆன்டிபா
"இப்படி பொய்ச் செய்திகளை வெளியிடும் மீடியாக்கள், போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களை துாண்டி விடுகின்றன" என்றார்.. மேலும் "ஆன்டிபா" எனப்படும் பொதுவுடைமை எதிர்ப்பு கொள்கை உடைய குழுவை, பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க போவதாகவும் அறிவித்துள்ளார். 'இடதுசாரி கொள்கை உடைய.. அதேசமயம் அரசுக்கு எதிராக செயல்படும் இந்த குழு தான், தங்களுடைய அரசியல் நோக்கத்துக்காக போராட்டங்களை தூண்டி விடுகிறது என்றும் அதிபர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பேட்டி
செய்தியாளர்களிடம் அவர் விரிவாக பேசியபோது,"இத்தகைய போராட்டங்கள் எல்லாம் அமைதி போராட்டம் கிடையாது.. இவை உள்நாட்டு பயங்கரவாதம், அப்பாவி உயிர்களை பலிவாங்குவதும்.. அப்பாவிகளின் ரத்தம் சிந்துவதும் நியாயமே கிடையாது.. இது மனிதகுல விரோதம்.. கடவுளுக்கே எதிரான குற்றம்... ஒன்றுமறியாத மக்களின் சொத்துக்களை சூறையாடுவோர் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
நிதியதவி
இந்த போராட்டங்களை தூண்டிவிட்டிருக்கும் ஆன்டிபா அமைப்புகளின் நபர்கள் ஜெயிலில்தான் ரொம்ப காலத்துக்கு இருக்க நேரிடும்... ஆனால் நாட்டு மக்களை காப்பாற்றுவதுதான் என் முதல் கடமை.. நாட்டின் சட்டங்களை காப்பாற்றுவேன் என்று சொல்லிதான் பதவியை ஏற்றுள்ளேன்.. அதனால் இதைதான் செய்வேன்.. ஜார்ஜ் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும்.
தண்டனைகள்
மாநில ஆளுநர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் பெரும்பாலான ஆளுநர்கள் பலவீனமாகவே இருக்கிறீர்கள்... யார் யாரெல்லாம் வன்முறையில் ஈடுபடுகிறார்களோ அவர்களை எல்லாம் உடனே கைது செய்யுங்கள்.. 10 வருஷம் ஜெயிலில் போடுங்கள்.. இதுவரை வாழ்க்கையில் அவங்க பார்த்திராத தண்டனைகளை தாருங்கள்.. ஆளுநர்களும் மேயர்களும், கலவரத்தை உடனே கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.. மக்களின் உயிர்களை காக்காவி்ட்டால் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை இறக்கிவிடுவேன்.. கொஞ்ச நேரத்தில் அமைதியை கொண்டுவந்துவிடுவேன்" என்று ஆவேசமாக கூறியுள்ளார் அதிபர் டிரம்ப்!!
சிக்கல்
ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் டிரம்ப் திணறியதை உலகமே பார்த்து பதறியது.. இப்போது ஆன்டிபா குழுதான் தூண்டிவிடுகிறது என்று பகிரங்கமாக சொல்லி உள்ளதும், நாடு முழுவதும் வன்முறையின் பிடியில் சிக்கி உள்ளதும், டிரம்புக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.. இந்த வருட கடைசியில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த போராட்டம் நிச்சயம் டிரம்புக்கு ஒரு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.