அதிர வைத்த டிராகன்ஃபிளை.. சீனாவிற்காக கூகுள் உருவாக்கிய புதிய சர்ச் எஞ்சின்.. ஊழியர்கள் எதிர்ப்பு!
சீனாவிற்காக கூகுள் உருவாக்க திட்டமிட்டு இருந்த டிராகன்ஃபிளை சர்ச் எஞ்சினுக்கு கூகுள் ஊழியர்களே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
Recommended Video
நியூயார்க்: சீனாவிற்காக கூகுள் உருவாக்க திட்டமிட்டு இருந்த டிராகன்ஃபிளை சர்ச் எஞ்சினுக்கு கூகுள் ஊழியர்களே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
சீனாவில் இணையம் பிறநாடுகளில் இருப்பது போல சுதந்திரமானது கிடையாது. அங்கு இணையத்தை பயன்படுத்த நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது.
அதன்படி அங்கு கூகுள் இணையதளத்தை யாரும் பயன்படுத்த முடியாது. சீனாவிற்கு என்று தனி சர்ச் எஞ்சின், தனி சமூக வலைத்தளங்கள் உள்ளது. அங்கு கூகுள், பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது.
டிராகன்ஃபிளை திட்டம்
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் டிராகன்ஃபிளை என்ற புதிய சர்ச் எஞ்சினை உருவாக்கி இருக்கிறது. இதை கூடிய விரைவில் சீனாவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் நேரடி யோசனையின் மூலம் இந்த டிராகன்ஃபிளை உருவாக்கப்பட்டுள்ளது.
ஏன் உருவாக்கினார்
சீனாவில் அரசு விதித்து இருக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இந்த சர்ச் எஞ்சின் உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது சீனா என்ன பாதுகாப்பு காரணங்கள் எல்லாம் கூறியதோ, அதை சரியாக பின்பற்றும் வகையில் இந்த டிராகன்ஃபிளை உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் நிறைய மக்கள் இருப்பதால் அந்த நாடு கூகுளால் குறிவைக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்த திட்டத்திற்கு கூகுள் பணியாளர்களே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். கூகுளில் வேலை பார்க்கும் முக்கியமான 30 மூத்த பணியாளர்கள் கூகுள் நிறுவனத்திற்கு இதனால் பெட்டிஷன் அனுப்பி இருக்கிறார்கள். வெளிப்படையாக தங்கள் பெயரை குறிப்பிட்டு அவர்கள் இந்த பெட்டிஷனை அனுப்பி உள்ளனர்.
காரணம் என்ன
இதற்கு அந்த கூகுள் பணியாளர்கள் நிறைய காரணங்களை தெரிவிக்கிறார்கள்.
1.கூகுள் சீனாவின் கட்டுப்பாடுகளுக்கு பணிய கூடாது.
2. கூகுள் நிறுவனம், இணையத்தை காக்க வேண்டும். ஆனால் அதற்கு எதிராக இருக்கும் சீனாவிற்கு துணை போக கூடாது.
3. சீனாவிற்கு கூகுள் அளித்து இருக்கும் சலுகைகளை மற்ற நாடுகளும் கேட்டால் இணைய சமநிலை பாதிப்படையும் என்று கூறியுள்ளனர்.