சாலையோரம் தோன்றிய லிங்கம்.. குவிந்த பக்தர்கள்.. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்! கடைசியில்தான் ட்விஸ்ட்
நியூயார்க்: ஞானவாபி மசூதி லிங்க விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்தான் அமெரிக்காவில் இதேபோல் லிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது.
வடஇந்தியாவில் மீண்டும் மசூதி - இந்து கோவில் மோதல்கள் எழ தொடங்கி உள்ளன. உத்தர பிரதேசத்தில் பாபர் மசூதி - அயோத்தி கோவில் வழக்கு முடிந்து, ராமர் கோவில் கட்டுமானம் அங்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஞானவாபி மசூதி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஞானவாபி மசூதியில் சிவன் கோவில் இருந்ததாகவும், இங்கு சிவன் சிலை இருப்பதாகவும் இந்துத்துவா அமைப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றமும், வாரணாசி நீதிமன்றமும் இரண்டு வெவ்வேறு விசாரணைகளை நடத்துகிறது. இங்கு லிங்கம் இருந்ததாக கூறப்படும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன. இந்து பிரிவினர் ஞானவாபி மசூதி என்பது அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு 1669ல் கட்டியதாக கூறி வருகின்றனர்.
ஞானவாபி மசூதி - சிவலிங்க வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றம், வாரணாசி கோர்ட் விசாரணை.. பின்னணி
ஞானவாபி மசூதி லிங்கம்
இந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்தான் அமெரிக்காவில் இதேபோல் லிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. அமெரிக்காவை ஒரு காலத்தில் உலுக்கிய சம்பவம் குறித்து பார்க்கலாம். 1993 - 94 காலகட்டத்தில்தான் இந்த விவகாரம் பெரிதானது. அங்கு இருக்கும் சான் பிரான்சிஸ்கோ கோல்டன் கேட் பகுதியில் திடீரென பெரிய சிவலிங்கம் போன்ற உருவம் கண்டுபிடிக்கப்பட்டது. பார்க் அருகே பெரிய அளவில் லிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சிவன்
இதையடுத்து அமெரிக்காவில் உள்ள இந்திய இந்துக்கள் பலர் இங்கு வந்து வழிபாடு செய்தனர். அதேபோல் அமெரிக்காவில் இந்துவாக மதம் மாறிய கிறிஸ்துவர்கள் பலர் இங்கு தீவிர வழிபாடு நடத்தினர். பல மாகாணங்களில் இருந்து நீண்ட தூரம் பயணித்து வந்து இங்கு வழிபாடு செய்தனர். லிங்கம் என்று நம்பப்பட்ட அந்த கல் மீது மக்கள் பால் அபிஷேகம் செய்தனர். அங்கேயே பலர் அமர்ந்து தியானம் செய்தனர்.
அமெரிக்கா லிங்கம்
சில பிராமணர்கள் அங்கே வந்து பூஜை செய்தனர். இதனால் இந்த இடம் இந்து புனித தலமாக மாற தொடங்கியது. சுயம்புவாக எழுந்தருளும் சிவ லிங்கம் இவர் என்று கூறி மக்கள் வழிபாடு செய்ய தொடங்கினர். அமெரிக்காவை சேர்ந்த பசுல் பாரிக் என்ற நபர்தான் இது லிங்கம் என்று கண்டுபிடித்து மக்களிடம் தெரிவித்தார். அப்போது சிஎன்என், வாஷிங்க்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களில் இது மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.
அரசு அதிகாரிகள்
இந்த நிலையில்தான் அரசு அதிகாரிகள் அந்த லிங்க கல்லை நீக்க முயன்றனர். இதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடந்தன. கிறிஸ்துவராக இருந்து இந்துவாக மாறிய மைக்கேல் போவேன் என்னும் காளிதாஸ், இது தொடர்பாக வழக்கும் தொடுத்தார். அதில், அங்கு இருக்கும் லிங்கத்தை அகற்ற கூடாது. அது பாவத்திற்கு வழி வகுக்கும். இங்கு இந்துக்கள் வழிப்பாடு செய்ய அனுமதிக்க வேண்டும். அது இந்து கோவில் இருந்த இடம் என்று வழக்கில் குறிப்பிட்டார்.
வழக்கு
இதன்பின்தான் வழக்கில் திருப்பமே ஏற்பட்டது. அந்த பார்க் அதிகாரிகள் கொடுத்த விளக்கத்தில், இது சாதாரண கல். வேறு இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. இங்கே பார்க்கில் போக்குவரத்து தடுப்பு அமைக்க வேண்டும் என்று இந்த கல்லை வைத்தனர். இதை உடைத்து தடுப்பு அமைக்க நினைத்தனர். ஆனால் அதற்குள் இதை கடவுள் என்று கூறி வழிபட தொடங்கிவிட்டனர்.
என்ன கல்
இங்கே மக்கள் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதோடு மற்றவர்கள் பார்க் செல்ல முடியவில்லை என்று வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட் அங்கு இருக்கும் கல்லை எடுக்க உத்தரவிட்டது. கோர்ட் கட்டணமாக கிறிஸ்துவராக இருந்து இந்துவாக மாறிய மைக்கேல் போவேன் என்னும் காளிதாஸுக்கு 14 ஆயிரம் டாலர் கொடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து அங்கிருந்து அந்த கல் எடுக்கப்பட்டது.
Recommended Video
கிரேன்
கிரேன் மூலம் அந்த கல் எடுக்கப்பட்ட போதுதான் அது.. புல்லட் போன்ற தோற்றத்தில் இருந்ததும்.. அது சிவ லிங்கம் இல்லை என்றும் தெரிந்ததும். இருப்பினும் மக்கள் பலர் இதற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் வேறு ஸ்டுடியோ பகுதிக்கு இந்த கல் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டது. அமெரிக்காவை இந்த லிங்க விவகாரம் 1994ல் பெரிய அளவில் புரட்டி போட்டது குறிப்பிடத்தக்கது.