மொத்த மூளையிலும் மாற்றம்.. ஷாக்கான எஃப்பிஐ.. அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளுக்கு நேர்ந்த விசித்திரம்!
கியூபாவில் பணியாற்றிய 40க்கும் மேற்பட்ட வெளியுறவு அதிகாரிகளுக்கு மூளையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்: கியூபாவில் பணியாற்றிய 40க்கும் மேற்பட்ட வெளியுறவு அதிகாரிகளுக்கு மூளையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணையில் எஃப்பிஐ அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர்.
கியூபாவின் தலைநகரான ஹவானாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருக்கும் அதிகாரிகள் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து விசித்திரமான பிரச்சனை சிலவற்றை சந்தித்து வருகிறார்கள். சிலர் நாள் முழுக்க தூங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
சிலருக்கு மனிதர்களால் கேட்க முடியாத ஒலிகள் கூட கேட்டு இருக்கிறது. இப்போதும் கேட்டு வருகிறது. சிலருக்கு உடலில் வித்தியாசமான நோய்கள் ஏற்பட்டு உள்ளது.
மிக மோசம்
அங்கு வேலை பார்த்த சிலர் அதிக மன அழுத்தத்தில் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். பணிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே அவர்கள் தற்கொலை செய்ய கூட முயன்று உள்ளனர். இன்னும் சிலருக்கு கொலை செய்யும் எண்ணங்கள் எல்லாம் எழுந்துள்ளது. மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ச்சியாக அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு ரிப்போர்டுகள் அனுப்பப்பட்டது.
26 பேர் ராஜினாமா
இந்த தொடர் பிரச்சனையால் மொத்தம் 40 அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டார்கள். இதில் 26 பேர் தங்கள் பணியை சென்ற வருட இறுதியில் ராஜினாமா செய்தனர். தொடர் சர்ச்சை நிகழ்ந்து வந்ததை அடுத்து, இது குறித்து விசாரிக்கும்படி அந்நாட்டு எஃப்பிஐ அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
என்ன ரிப்போர்ட்
இந்த நிலையில்தான் இந்த 40 பேருக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் சிகிச்சை குறித்த மெடிக்கல் ரிப்போர்ட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் மூளையில் மொத்தமாக பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் மூளைக்கும் இவர்களின் மூளைக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. நிறைய முக்கிய அணுக்கள் இவர்களின் மூளையில் காணப்படவில்லை, என்று அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
தாக்குதல்
ஆனால் இவர்கள் எல்லோரும் தாக்குதலுக்கு உள்ளானது போலவே தெரியவில்லை. அதே சமயம் எல்லோருக்கும் ஒரே மாதிரி பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது எப்படி நடந்தது. இதன் மர்மம் என்ன. இதற்கு பின் யார் இருக்கிறார் என்ற எந்த விபரமும் வெளியாகாமல் உள்ளது. இவர்களை ஆராய்ச்சி செய்த அமெரிக்க மருத்துவர் ராகினி வெர்மா, அந்த ஆய்வு கட்டுரையை பொதுவில் இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.
கியூபா
இவர்கள் எல்லோரும் கியூபாவில் தூதரகத்தில் பணியாற்றினார்கள் என்பது மட்டும்தான் இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரே ஒற்றுமை. ஆனால் கியூபா, நாங்கள் அமெரிக்க பணியாளர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. எங்கள் மீது தவறு எதுவும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் மர்மம்
இந்த நிலையில் இந்த 40 பணியாளர்களுக்கும் என்ன ஆனது. இவர்களின் மூளையில் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்று தொடர்ந்து மர்மம் நிலவி வருகிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையை இந்த மருத்துவ அறிக்கை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது