உங்களுக்கெல்லாம் எவ்வளவு தைரியம்.. நீங்கள் எல்லாம் அரக்கர்கள்.. உலகத் தலைவர்களை உலுக்கிய சிறுமி!
ஐநா மாநாட்டில் 16 வயது சிறுமி கிரிட்டா சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்
Recommended Video
நியூயார்க்: "என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எல்லாரும்? உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தைரியம்? யாருக்காவது எங்க மீது அக்கறை இருக்கா" என்று டிரம்ப் உள்பட உலக நாட்டு தலைவர்களை நேருக்கு நேர் பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார் 16 வயசு சிறுமி!
ஐநா., சபையின் 74வது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று பருவநிலை நடவடிக்கை மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி கலந்து கொண்டு பேசினாள். அவள் பெயர் கிரேட்டா. காலநிலை மாற்றத்தின் மீது அதிக பிடிப்பு இருப்பவள். உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு எல்லாம் கிரேட்டாதான் எல்லாமுமாக இருப்பவள்.
வெற்று வார்த்தை
கிரேட்டா பேசும்போது "நான் இந்நேரம் இங்கே இருக்கவே கூடாது. ஸ்கூலில் படித்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் என் கனவு, குழந்தை பருவத்தினை நீங்கள் வெற்று வார்த்தைகளால் திருடிவிட்டீர்கள். பேரழிவின் தொடக்கத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
தலைமுறை
ஆனால், நீங்களோ, பணம், பொருளாதார வளர்ச்சி என்று கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் எத்தனையோ பேர் செத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இளைய தலைமுறையிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கிறீங்களே.. உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தைரியம்?
அரக்கர்கள்
பருவநிலை மாற்றத்தை உணர்ந்து அதை தடுக்க வேண்டும். அப்படி நீங்கள் உண்மையான முயற்சியை எடுக்காவிட்டால், நீங்கள் அரக்கர்கள் தான். எங்களை போன்ற இளைய தலைமுறை உங்களை கவனித்து வருகிறது.
மன்னிக்க மாட்டோம்
அடுத்த தலைமுறையின் பார்வை உங்கள் முன்தான் உள்ளது. எங்களை மட்டும் தோல்வியடைய செய்துடாதீங்க. அப்படி செய்தால், உங்களை எப்பவுமே நாங்கள் மன்னிக்க மாட்டோம்" என்று கிரேட்டா தன்பெர்க் ஆக்ரோஷமாக கூறினார்