காட்டுத் தீயாக கொரோனா.. பேரழிவாக பல லட்சம் பேர் பலியாகும் அபாயம் : ஐ.நா. பொதுச்செயலாளர்
நியூயார்க்: காட்டுத் தீயாக உலக நாடுகளில் பரவும் கொரோனாவை தடுக்காவிட்டால் பல லட்சம் பேரை பலி கொள்ளும் பேரழிவாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குத்தரேஸ் எச்சரித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி இருந்தாலும் அந்த நாட்டை விட உலகின் பிற நாடுகளில்தான் இக்கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. இத்தாலி மற்றும் ஈரானில் மிக அதிகமாக உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன.
தெற்காசியாவிலும் கொரோனாவின் தாக்கம் உக்கிரமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியா குத்தரேஸ் கூறியதாவது:
கொரோனா காட்டுத் தீயாக பரவி வருகிறது. தொற்று நோய் பரவக் கூடிய பகுதிகளில் இது விரிவடைந்துவிட்டால் பல லட்சம் பேர் பலியாகும் பேரபாயம் உள்ளது. ஏற்கனவே இந்த பேராபத்தை கையாண்ட நாடுகள் இதர நாடுகளுக்கும் உதவ வேண்டும்.
செல்வந்த நாடுகளானவை ஜி20 உள்ளிட்ட நாடுகளுக்கும் உதவ வேண்டும். இப்படி நாடுகள் உதவிக் கொள்ளாமல் போனால் மிகப் பெரும் பேரழிவை சந்திக்க நேரிடும். இதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அந்தோனியா குத்தரேஸ் கூறியுள்ளார்.