வளமான விவசாய பகுதி.. உலகின் கூரை.. ஒளிரும் டெல்லி.. இமயமலையின் ’வாவ்’ போட்டோ!
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இமயமலையின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
நியூயார்க்: நாசா வெளியிட்டுள்ள விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பனிபடர்ந்த இமயமலையின் பிரமாண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
உலகின் பல்வேறு பிரம்மாண்டமான மலைத்தொடர்களில் முக்கியமான மலைத்தொடர் இமயமலை. அதன் அழகையும், பிரம்மாண்டத்தையும் கண்டு யாராலும் வியப்படையாமல் இருக்க
முடியாது.
ஆனால் உலகின் மிக உயர்ந்த சிகரங்களை கொண்டுள்ள இமயமலைகளில் டிரெக்கிங் செய்து, அதன் அழகை காண்பது என்பது அத்தனை எளிதல்ல. பல சவால்களை கொண்ட பயணம் அது. அப்படி பயணம் செய்து இமயமலையின் அழகை ரசித்து உணர்ந்தவர்கள் வெகு சிலரே.
இயற்கை அழகு
இந்த சூழலில் இமயமலையின் அழகை உலகறிய செய்யும் வகையில் புதிய புகைப்படம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இமயமலையின் பனிபடர்ந்த சிகரங்களையும், அதன் அழகையும் விண்வெளியில் இருந்து படம்பிடித்திருக்கிறது நாசா.
மோதல்களின் விளைவு
"பனி மூடிய இமயமலை மலைகளின் அற்புதமான காட்சி இந்த புகைப்படத்தில் உள்ளன. உலகின் மிக உயரமான மலைத்தொடரான இமயமலை இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளுக்கு இடையில் 50 மில்லியன் ஆண்டுகள் மோதல்களின் விளைவாகும்.
உலகின் கூரை
தெற்கே அல்லது இந்த படத்தின் வலதுபுறத்தில், வட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வளமான விவசாய பகுதி உள்ளது. வடக்கு அல்லது இந்த படத்தின் இடதுபுறம், "உலகின் கூரை" என வர்ணிக்கப்படும் திபெத்திய பீடபூமி உள்ளது. சூரிய கதிர்வீச்சுக்கு வினைபுரியும் வளிமண்டல துகள்களின் மங்கலான, ஆரஞ்சு காற்றோட்டத்திற்குக் கீழே இந்திய நகரமான டெல்லி மற்றும் பாகிஸ்தானின் லாகூர் ஆகியவற்றின் பிரகாசமான நகர விளக்குகள் காணப்படுகின்றன", என நாசா எனது பதிவில் தெரிவித்துள்ளது.
குவியும் லைக்ஸ்
இதுவரை வரைப்படங்களில் மட்டுமே இமயமலையை பார்த்து வந்தவர்களுக்கு நாசாவின் இந்த புகைப்படம் மிகப்பெரும் பாக்கியம். பூமி உருண்டையில் இமயமலையும், டெல்லியும், லாகூரும், திபெத்தும் எப்படி அமைந்திருக்கின்றன என்பதை தெளிவாக படம்பிடித்திருக்கிறார்கள். நாசா வெளியிட்டுள்ள இந்த அற்புத புகைப்படத்திற்கு லைக்ஸ் மழை குவிந்து வருகிறது. இதுவரை 1,030,720 லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இமயமலையின் புகைப்படம். இந்த புகைப்படத்தை பலரும் தங்கள் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.