அதிபர் டிரம்ப்பின் பதவி காலி ஆகுமா? பதவி நீக்க தீர்மானத்தில் இந்த வாரமே வாக்கெடுப்பு.. என்ன ஆகும்?
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இவருக்கு எதிரான புகாரை விசாரிக்கலாம் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை அனுமதி அளித்த பின் தற்போது புகார் விசாரிக்கப்பட்டு அது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
அமெரிக்காவில் இதுவரை இரண்டு அதிபர்கள் அவர்களின் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரிச்சர்ட் நிக்சன் 1974ல் தகுதி நீக்கம் செய்யப்படும் முன் பதவி விலகினார்.
பில் கிளிண்டன் , ஆண்ட்ரு ஜான்சன் ஆகியோர் 1998 மாட்ரிம் 1868ல் பிரதிநிதிகள் சபை மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் செனட் சபையால் இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இதே போல் ஒரு நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த முறை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
நீக்கம் என்றால் என்ன
அமெரிக்காவில் அதிபரை அல்லது உயர் அதிகாரிகளை தகுதி நீக்கம் செய்யும் முறை மிகவும் சிக்கலானது. இந்தியாவில் மாநில சட்டசபைகளில் செய்யப்படுவது போல, தகுதி நீக்கம் செய்யப்படும் முறைதான் அமெரிக்காவை impeachment (இம்பீச்மெண்ட்) என்று அழைக்கப்படுகிறது.இது குற்றம் செய்த அரசியல் தலைவர்களை தண்டிக்கும் பொருட்டு கொண்டு வரப்படும் தீர்மானம் ஆகும். தற்போது அந்நாட்டு அதிபர் டிரம்பிற்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
என்ன வாக்கெடுப்பு
இதன் மீதான வாக்கெடுப்புதான் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நடக்க உள்ளது. பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடந்த பின் செனட் சபையில் அதேபோல் வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒருவாரத்தில் இந்த இரண்டு வாக்கெடுப்புகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்
இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து, மோசடி செய்து அதிபர் ஆனார். டிரம்ப் சட்டங்களை வளைத்து, தனக்கு வேண்டியதை செய்கிறார், என்று ஒரு பக்கம் புகார் வைக்கப்படுகிறது. ரஷ்யாதான் டிரம்பிற்காக தேர்தலின் போது நிறைய முறைகேடுகளை செய்தது என்று கூறியது.
வேறு என்ன
ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை ஊதிய விதிகளை டிரம்ப் மீறுகிறார். வெளிநாட்டு ஒப்பந்தங்களை மீறி டிரம்ப் நடந்து கொள்கிறார். வெளிநாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று கூறி, போர் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். என்று நிறைய புகார்கள் வைக்கப்படுகிறது.
முக்கிய புகார்
அதேபோல் டெமாக்ரடிக் கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டுகிறார். உக்ரைன் அதிபரிடம் பிடனுக்கு எதிராக சதி செய்ய பேரம் பேசி இருக்கிறார் என்று கூறி உள்ளனர். இந்த புகார்தான், மொத்த விசாரணைக்கும் காரணம் ஆகும்.
அனுமதி அளித்தது
இதன் மீதான வாக்கெடுப்பு இந்த வாரம் நடக்க உள்ளது.இந்த புகார்கள் தொடர்பான விசாரணையை தொடர்ந்து செய்யலாம் என்று அந்நாட்டு பிரதிநிதிகள் சபை கடந்த 2 வாரம் முன் தெரிவித்தது. புகார்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது. டிரம்ப் தவறான முடிவுகளை எடுத்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறியது. இந்த நிலையில், விசாரணை முடிந்து தற்போது வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
என்ன வாக்கெடுப்பு
அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது.
ஜனநாயக கட்சிக்கு அங்கு 233 உறுப்பினர்கள் உள்ளனர். அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 உறுப்பினர்களே இருக்கிறார்கள். இதனால் பிரநிதிகள் சபையில் கண்டிப்பாக டிரம்ப் தோல்வி அடைவார். அவருக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறும்.
ஆனால் என்ன
ஆனால் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு செனட் அவையில் 53 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். அங்கு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 66 செனட் உறுப்பினர்களின் பலம் தேவை. இதனால் அங்கு டிரம்ப் தகுதி நீக்கம் செய்யப்படுவது சந்தேகம்தான், செனட் சபையில் டிரம்ப் காப்பாற்றப்பட வாய்ப்புள்ளது.
பதவி விலகல்
ஆனால் பொதுவாக பிரதிநிதிகள் சபையில் ஒரு அதிபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவர் பெரும்பாலும் பதவி விலக வாய்ப்புள்ளது. இதனால் டிரம்ப் பதவி விலகுவாரா அல்லது வேறு ஏதாவது முடிவு எடுப்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதனால் அடுத்த அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதும் சந்தேகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.