பதவி பறிபோகும் நிலையில் அதிபர் டிரம்ப்.. பதவி நீக்க தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை இரண்டிலும் வெற்றி பெற்றால், டிரம்ப் தனது பதவியை இழக்க நேரிடும்.
அமெரிக்காவில் அதிபரை தகுதி நீக்கம் செய்யப்படும் முறைதான் impeachment (இம்பீச்மெண்ட்) என்று அழைக்கப்படுகிறது.இது குற்றம் செய்த அரசியல் தலைவர்களை தண்டிக்கும் பொருட்டு கொண்டு வரப்படும் தீர்மானம் ஆகும்
என்ன காரணம்
இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து, மோசடி செய்து அதிபர் ஆனார். டிரம்ப் சட்டங்களை வளைத்து, தனக்கு வேண்டியதை செய்கிறார், என்று ஒரு பக்கம் புகார் வைக்கப்படுகிறது. ரஷ்யாதான் டிரம்பிற்காக தேர்தலின் போது நிறைய முறைகேடுகளை செய்தது என்று கூறப்படுகிறது.
தேர்தல் எப்படி
டெமாக்ரடிக் கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டுகிறார். உக்ரைன் அதிபரிடம் பிடனுக்கு எதிராக சதி செய்ய பேரம் பேசி இருக்கிறார் என்று கூறி உள்ளனர். இந்த புகார்தான், மொத்த விசாரணைக்கும் காரணம் ஆகும்.
விதிகள்
மேலும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை ஊதிய விதிகளை டிரம்ப் மீறுகிறார். வெளிநாட்டு ஒப்பந்தங்களை மீறி டிரம்ப் நடந்து கொள்கிறார். வெளிநாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று கூறி, போர் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். என்று நிறைய புகார்கள் வைக்கப்படுகிறது.
அனுமதி அளித்தது
அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை டிரம்ப் மீதான புகாரை விசாரிக்க கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. அந்த விசாரணை முடிந்துள்ளது. தற்போது டிரம்ப் பதவி நீக்கம் தொடர்பாக இன்று அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
என்ன வாக்கெடுப்பு
அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது.
ஜனநாயக கட்சிக்கு அங்கு 233 உறுப்பினர்கள் உள்ளனர். அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 உறுப்பினர்களே இருக்கிறார்கள். இதனால் பிரதிநிதிகள் சபையில் கண்டிப்பாக டிரம்ப் தோல்வி அடைவார். அவருக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறும்.
செனட் சபை
அதன்பின் இந்த வாக்கெடுப்பு செனட் சபையில் நடக்கும். அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு செனட் அவையில் 53 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். அங்கு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 66 செனட் உறுப்பினர்களின் பலம் தேவை. இதனால் அங்கு டிரம்ப் தகுதி நீக்கம் செய்யப்படுவது சந்தேகம்தான், செனட் சபையில் டிரம்ப் காப்பாற்றப்பட வாய்ப்புள்ளது.