தப்பு பண்ணிட்டோமேய்யா.. தப்பு பண்ணிட்டோமே.. அமெரிக்காவுடன் சேர்ந்ததே தப்பு.. இம்ரான் கான் புலம்பல்
நியூயார்க்: செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டதற்கு பின்னர் அந்நாட்டின் ராணுவத்துக்கு ஆதரவு அளித்தது பாகிஸ்தான் செய்த மிகப் பெரிய தவறாகும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் என்ற சிந்தனை அமைப்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் காஷ்மீரில் அமலில் உள்ள தடையை இந்தியா விலக்கிக் கொள்ள வேண்டும் என உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்த்தேன்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் காஷ்மீர் விவகாரத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியிருந்தேன். ஆனால் இந்தியாவோ நம்மை திவாலாக்க நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கருப்பு பட்டியலில் சேர்க்கும் நிலைக்கு தள்ளிவிட்டது.
சர்வதேச பிரச்சினை
காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் இந்தியா தனது அரசியலமைப்பு சட்டம், சிம்லா ஒப்பந்தம், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயலும் நிலையில் இந்தியாவோ அதை உள்நாட்டு பிரச்சினை என்கிறது.
ஜேம்ஸ் மட்டீஸ்
தான் பார்த்ததிலேயே பாகிஸ்தான்தான் மிகவும் அபாயகரமான நாடு என முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஜேம்ஸ் மட்டீஸ் கூறியது தவறு. அதாவது அவர் பாகிஸ்தானை முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை.
மிகப் பெரிய குற்றம்
செப்டம்பர் 11-ஆம் தேதி இரட்டை கோபுரங்கள் மீது அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது பாகிஸ்தான் அந்நாட்டிற்கு ஆதரவு தெரிவித்ததே பாகிஸ்தான் செய்த மிகப் பெரிய குற்றமாகும்.
உறுதி கூறியிருக்க கூடாது
பாகிஸ்தானின் ராணுவ அதிகாரியாக இருந்த பர்வேஸ் முஷாரப் அமெரிக்காவுடன் துணை நிற்போம் என தன் அரசால் முடியாததை உறுதியளித்திருக்கக் கூடாது. 1980-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை சோவியத் ஆக்கிரமித்தது. அப்போது அமெரிக்காவின் உதவியோடு சோவியத்தை எதிர்க்க பாகிஸ்தான் ஏற்பாடு செய்தது.
சோவியத்
அப்போது உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை அழைத்து பாகிஸ்தானின் உளவுத் துறை அமைப்பு சோவியத்தை எதிர்க்க பயிற்சி அளித்தது. எனவே சோவியத்துக்கு எதிராக களமிறக்கவே தீவிரவாத அமைப்புகளை அமைத்தோம். ஜிகாதிகள் எல்லாம் அப்போது ஹீரோக்களாக பார்க்கப்பட்டனர். 1989-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு சோவியத் திரும்பி சென்றது. அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானை விட்டு சென்றது.
சீனாவுக்கு நன்றி
நாங்களும் இந்த இயக்கங்களை விட்டு வெளியேறினோம். பின்னர் செப்டம்பர் 11- தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் மீண்டும் இணைந்தோம். வெளிநாடுகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து போரிடுவதற்காக இந்த ஜிகாத் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால் தற்போது அந்த குழுக்கள் தீவிரவாதிகள் என நாம் கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். எனவே பாகிஸ்தான் இந்த போரின் போது நடுநிலையுடன் இருந்திருக்க வேண்டும். நாங்கள் மிகவும் சோதனை காலத்தில் இருந்த போது எங்களுக்கு உதவிய சீனாவுக்கு நன்றி என்றார்.
பாகிஸ்தான் ஆதரவு
கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்கா படையெடுப்புக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை அங்கீகரித்த 3 நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும். செப்டம்பர் 11- தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்த பின்னர் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க படைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.