ஜனவரியில் வெளியான ஒரு கருத்து கணிப்பு.. இந்தியாவிற்கு ஓடோடி வந்த டிரம்ப்.. ஓ இதுதான் காரணமா!
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருவதற்கும் அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருவதற்கும் அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இதற்கு பின் பல முக்கிய திட்டங்கள் இருக்கிறது.
Recommended Video
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.. பல வருடங்களுக்கு முன் சூரியன் படத்தில் கவுண்டமணி சொன்ன இந்த வசனம் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பொருள் தரும். கடந்த ஐந்து மாதங்களில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நடந்த இரண்டு நிகழ்வுகள் இதற்கு பொருந்தும்.
பொதுவாக ஊர் பகுதிகளில் உறவினர்கள் இடையே தங்கள் செல்வாக்கை காட்ட சிலர் மொய் விருந்து வைப்பது வழக்கம். தங்களுக்கு காசு தேவை என்றாலும் கூட, பலர் மொய் விருந்து வைத்து பணம் திரட்டுவது வழக்கம். அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை பயன்படுத்தி வைக்கும் மொய் விருந்துதான்.. நமஸ்தே, டிரம்ப்!
என்ன நிகழ்வு
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 22ம் தேதி அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடைப்பெற்றது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மூலம் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி இதில் கவனம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த விழா முழுக்க கவனம் பெற்றது டிரம்ப் மட்டும்தான். டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் போலதான் இது இருந்தது. மோடி வெறும் கருவியாக மட்டுமே இதில் இருந்தார்.
மீண்டும் எப்படி
தற்போது மீண்டும் அதேபோல்தான் இந்தியாவில் நமஸ்தே மோடி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அமெரிக்காவில் கடந்த 2016ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தார். 50 மாநிலங்களில் முதலில் பல்வேறு மாநிலங்களில் ஹிலாரிதான் முன்னிலை வகித்தார். ஆனால் போக போக டிரம்ப் பல மாநிலங்களில் முன்னிலை வகித்து தேர்தல் நேரத்தில் வெற்றிபெற்றார்.
டெக்ஸாஸ் எப்படி
அதேபோல் அவர் மிக முக்கியமான பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்ஸாஸ் மாநிலத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். பொதுவாக டெக்ஸாஸ் மாகாணத்தில் வெற்றிபெறுவது அதிபர்களின் கனவு. அமெரிக்காவில் பெரிய மாகாணங்களில் ஒன்றுதான் டெக்ஸாஸ். அங்கு டிரம்ப் பெற்ற வெற்றி முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்பட்டது. ஆனால் டெக்ஸாஸ் மாநிலத்தில் டிரம்ப் வெற்றி பெற்று இருந்தாலும் கூட அங்கு இருக்கும் இந்தியர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை .
என்னாச்சு
டிரம்ப் கொள்கைகள், வெளிநாட்டினருக்கு எதிராக இருக்கிறது என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருதுகிறார்கள். முக்கியமாக அவரின் விசா மற்றும் குடியுரிமை கொள்கைகள் எதிராக இருக்கிறது என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருதினார்கள். நாங்கள் வேலை இழக்க நேரிடும் என்று டிரம்ப்பை பார்த்து இந்தியர்கள் பயந்தார்கள். இதை வரும் தேர்தலில் மாற்ற டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
மோடி எப்படி
2020 அதிபர் தேர்தலில் டிரம்ப் வெல்ல வேண்டும் என்றால், அதற்கு அங்கிருக்கும் இந்தியர்கள் ஆதரவும் கணிசமாக தேவை. டிரம்பிற்கு தற்போது கிடைத்து இருக்கும் ''இந்திய அஸ்திரம்''தான் பிரதமர் மோடி. அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியின் கொள்கைக்கு ஆதரவாக பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தலைவர்களும் வலதுசாரி தலைவர்கள்தான். இந்தியாவில் பிரதமர் மோடி வைத்திருக்கும் கொள்கையைத்தான் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் வைத்துள்ளார்.
என்ன ஆதரவு
டிரம்ப்பின் இந்த கொள்கைகளுக்கு அங்கிருக்கும் இந்தியர்கள் ஆதரவு தெரிவிப்பதில்லை. ஆனால் இந்தியாவில் இருக்கும் மோடியை தீவிரமாக ஆதரிப்பார்கள். அடுத்த அதிபர் தேர்தலில் இந்த அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் டிரம்பிற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. இப்போது வரை நடந்த கருத்து கணிப்புகளில் டெக்ஸாஸ் மாகாணத்தில் டிரம்பின் குடியரசு கட்சி வெற்றிபெற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
மாற்ற வேண்டும்
அங்கு கண்டிப்பாக ஜனநாயக கட்சிதான் வெற்றிபெறும் என்று கூறி வருகிறார்கள். முக்கியமாக கடந்த ஜனவரியில் வெளியான கருத்து கணிப்பு, இந்தியர்களின் ''டிரம்ப்'' வெறுப்பை அப்படியே வெளிக்காட்டியது. இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று டிரம்ப் துடிக்கிறார். இதை மாற்றத்தான் டிரம்ப் இந்தியா வருகிறார். அவராகவேத்தான் இந்த விழாவிற்கு திட்டமிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி நடத்தும் நமஸ்தே டிரம்ப் விழாவை தனது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
எப்படி இந்தியர்கள்
இந்த மாநாட்டின் மூலம் இந்தியர்களை கவர்ந்தால் அமெரிக்காவில் இந்தியர்கள் வாழும் மாகாணத்தில் வெற்றியை ருசிக்கலாம் என்று டிரம்ப் நினைக்கிறார். இதன் மூலம் மீண்டும் அமெரிக்காவின் அதிபர் ஆக அவர் திட்டமிடுகிறார். மோடியை விரும்பும் அமெரிக்க வாழ் இந்திய மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று டிரம்ப் நம்புகிறார். அது ஒரு விதத்தில் உண்மைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தொடங்கியது
ஹவுடி மோடி விழாவிலேயே டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. அது இன்று சூடுபிடிக்க போகிறது என்பதுதான் உண்மை. அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் இதனால் கொஞ்சம் இந்தியா மீது கடுப்பில் இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். தேர்தல் முடிவுகள் மட்டும் இந்த வருட இறுதியில் டிரம்பிற்கு எதிராக வந்தால், இந்தியா மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.