சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: குடியரசு தினத்தில் 30 நகரங்களில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் போராட்டம்
நியூயார்க்: சி.ஏ.ஏ.வுக்கு எதிராக குடியரசு தினத்தில் 30 நகரங்களில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பிரமாண்ட போராட்டங்களை நடத்தினர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தற்போது அமெரிக்கா வாழ் இந்தியர்களும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
குடியரசு தினமான ஜனவரி 26-ல் அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ, ஹூஸ்டன், அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட 30 நகரங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்திய தூதரகங்கள் முன் ஒன்று திரண்ட அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.
இதில் பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. ஆகியவற்றை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில், மனித உரிமைகளுக்கான இந்துக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பினர் இணைந்து இப்போராட்டங்களை நடத்தினர். வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டத்தில் மகசேசே விருது பெற்ற சந்தீ பாண்டே கலந்து கொண்டு இந்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
வாஷிங்டன் உள்ளிட்ட சில நகரங்களில் பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்திய அரசுக்கு எதிராக தனியாகவும் போராட்டங்களை நடத்தினர்.