50 நாட்களுக்குள் 55 டாப் பதவிகள் - ஜோ பைடன் நிர்வாகத்தை ஆளும் இந்திய வம்சாவளியினர்
நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance rover) விண்கலம் கடந்த மாதம் களமிறக்கப்பட்டது. இந்த பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை வழிநடத்தும் குழுவின் தலைவராக வெற்றிகரமாக செயல்பட்டவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வாதி மோகன்.
இந்நிலையில், பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து நாசா சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அதிபர் ஜோ பைடன், விஞ்ஞானி ஸ்வாதி மோகனுக்கு புகழாரம் சூட்டினார்.
அதிபர் பைடன் பதவியேற்ற 50 நாட்களுக்குள், அவரது speech writer முதல் நாசா வரை, அரசாங்கத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரிவின் முக்கிய தலைமை பதவிகளுக்கு குறைந்தது 55 இந்திய-அமெரிக்கர்களை நியமித்துள்ளார்.
நாசா நிகழ்வில் அவர் பேசுகையில், "இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் நாட்டை வழிநடத்துகின்றனர். நீங்கள் (சுவாதி மோகன்), எனது துணை அதிபர் (கமலா ஹாரிஸ்), எனது Speech Writer (வினய் ரெட்டி) உட்பட அனைவரும் சிறப்பாக செயல்படுகிறீர்கள்" என்றார்.
பைடன் நிர்வாகத்தில் தான் முதல் 50 நாட்களில் முதன்முறையாக அதிக அளவிலான இந்திய-அமெரிக்கர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், மூத்த தூதரக அதிகாரியுமான உஸ்ரா ஜியா என்பவருக்கு வெளியுறவுத்துறையில் முக்கிய பதவியை ஜோ பைடன் வழங்கியுள்ளார். சிவில் பாதுகாப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணைச் செயலாளராக உஸ்ரா ஜியா நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார கமிட்டி தலைவராக இந்திய வம்சாவளி பெண் நீரா டாண்டன் நியமனத்தை வாபஸ் பெற்றார் ஜோ பைடன்!
அதேபோல், அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருக்கும் ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஷ்மீரில் பிறந்த ஆயிஷா ஷா என்ற பெண், வெள்ளை மாளிகை டிஜிட்டல் குழுவின் சீனியர் பார்ட்னர்ஷிப் மேனேஜராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சமீரா ஃபசிலி என்ற இந்திய வம்சாவளி பெண் வெள்ளை மாளிகையில் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வெள்ளை மாளிகையில் துணை அதிபருக்கான துணை பத்திரிகை செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சிங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்று கிட்டத்தட்ட 55 இந்திய-அமெரிக்கர்கள், பைடன் அரசாங்கத்தால் முக்கிய பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.