தனி ஆள்.. கெத்து.. ஐ.நா. பொதுச் செயலாளர் பதவி - களமிறங்கும் இந்திய வம்சாவளிப் பெண்
நியூயார்க்: 34 வயதான இந்திய வம்சாவளிப் பெண் அரோரா அகாங்க்ஷா, ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அந்தோனியோ குத்தேரஸ் ஐ.நா. சபையின் 9-வது பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். 2017 ஜனவரி 1-ம் தேதி தொடங்கிய அவரது பதவிக் காலம், 2021 டிசம்பர் மாத இறுதியில் முடிவடைகிறது. எனினும், ஜனவரி 2022 முதல் துவங்கும் அடுத்த பொதுச் செயலாளருக்கான பதவிக் காலத்தையும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரே நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு அரோரா அகாங்க்ஷா போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
34 வயதான இந்திய வம்சாவளிப் பெண்ணான அரோரா, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் (United Nations Development Programme) தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இதற்காக #AroraForSG என்ற ஹேஷ்டேக் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
இதுதொடர்பாக இரண்டரை நிமிட வீடியோ வெளியிட்டுள்ள அரோரா, "கடந்த 75 ஆண்டுகளாக உலகத்துக்கு அளித்த அகதிகள் பாதுகாப்பு உள்ளிட்ட வாக்குறுதியை ஐ.நா. நிறைவேற்றவில்லை. அகதிகள் பாதுகாக்கப்படவில்லை, மனிதாபிமான உதவி மிகக் குறைவு. அதனால்தான் நான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
75 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்றதில்லை.
UNOW.org வலைத்தள விவரத்தின்படி, அரோரா கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் நிர்வாக ஆய்வுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். மேலும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.