டிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம்
நியூயார்க்: இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் இடையில் அமெரிக்காவில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் மூன்று நாடுகளும் உடன்படிக்கை மேற்கொண்டது.
சர்வதேச அரசியலில் இன்று மிக முக்கியமான நாள் என்றுதான் குறிப்பிட வேண்டும். இத்தனை வருடமாக இஸ்ரேல் உடன் கடுமையான மோதலை கடைப்பிடித்து வந்த முக்கியமான 2 இஸ்லாமிய நாடுகள் தற்போது இஸ்ரேல் உடன் நட்பாக மாறியுள்ளது.
இஸ்ரேல் உடன் மத்திய கிழக்கின் இரண்டு முக்கியமான நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஒப்பந்தம் செய்துள்ளது. பல வருட கசப்புகளை, சண்டையை மறந்து மூன்று நாடுகளும் அமெரிக்காவின் மத்தியசத்தின் பெயரில் ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஜோ பைடன் மீது சந்தேகம்.. அவருக்கு ஊக்குமருந்து சோதனை செய்ய வேண்டும்.. டிரம்ப் பகீர் புகார்!
டிரம்ப் ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட முழு முதற்காரணம். இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கையெழுத்திட்டார். அதேபோல் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயாத் மற்றும் பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாடிப் அல் சாயனி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
எத்தனை நாடுகள்
இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்யும் 3 மற்றும் 4வது இஸ்லாமிய நாடாக இதன் மூலம் அமீரகம், பஹ்ரைன் உருவெடுத்துள்ளது. இதற்கு முன் எகிப்து மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகள் 1979 மற்றும் 1994ல் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய அரபு அமீரகம், இதன் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைமை சரியாகும்.
புதிய பாதை
இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய நாடுகள் இடையிலான உறவில் இது புதிய பாதையை போட்டுக் கொடுக்கும். முதலில் இந்த ஒப்பந்தம் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மட்டுமே நடப்பதாக இருந்தது. ஆனால் அதன்பின் கடைசியில் பஹ்ரைன் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது. இந்த நிலையில் தற்போது ஓமான் - இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா முயன்று வருகிறது.
இல்லை பெயர்
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் பாலஸ்தீனம் குறித்து எதுவும் பேசப்படவில்லை. பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பாலஸ்தீனத்தில் இனி இஸ்ரேல் ஆக்கிரமிப்பை செய்ய கூடாது. பாலஸ்தீனத்தில் இன்னும் 17% நிலத்தை இஸ்ரேல் கேட்டு வந்த நிலையில், அந்த ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா அனுமதிக்காது
இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை இனி அமெரிக்கா அனுமதிக்காது என்பது மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் ஆறுதலான விஷயம். ஆனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கொள்கைக்கு இந்த ஒப்பந்தம் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்காது. இஸ்ரேல் அமெரிக்க அனுமதி இன்றி பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
என்ன மாதிரியான ஒப்பந்தம்
இன்னொரு பக்கம் இந்த ஒப்பந்தம் மூலம், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவ, பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை இனி இஸ்ரேல் மேற்கொள்ள முடியும். அதாவது இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் மூன்றும் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உறவுகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் இஸ்ரேல் மீது கோபத்தில் இருக்கும் மற்ற இஸ்லாமிய நாடுகள் உடன் எளிதாக இஸ்ரேல் எதிர்காலத்தில் நட்பாக முடியும்.
பாலஸ்தீனம் கோபம்
இந்த ஒப்பந்தம் காரணமாக பாலஸ்தீனம் கடும் கோபத்தில் உள்ளது. எங்களை அமீரகம், பஹ்ரைன் இரண்டு நாடுகளும் ஏமாற்றிவிட்டது என்று கூறியுள்ளது. அதேபோல் ஈரானும் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து உள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு இவர்கள் துரோகம் செய்துவிட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டி உள்ளது.