காணாமல் போய் 2 வருடம்.. மறக்காத பழைய பாசம்.. எஜமானியைத் தேடி 80 கிமீ நடந்தே சென்ற செல்ல நாய்!
அமெரிக்காவில் இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன நாய், சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தனது எஜமானின் வீட்டை அடைந்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
நியூயார்க்: இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன நாய், சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தனது எஜமானின் வீட்டை அடைந்த நெகிழ வைக்கும் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
வளர்ப்பு விலங்குகளில் மனிதனின் உற்ற தோழனாய் விளங்குவது நாய்கள் தான். பிறப்பிலேயே நன்றி உணர்ச்சி அதிகம் கொண்ட நாய்கள், ஒருவேளை சாப்பாடு போட்டவருக்குக்கூட நன்றி பாராட்டுவதை பலரும் பார்த்திருப்போம். வீட்டை காவல் காப்பது முதல் மோப்பம் பிடித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது வரை நாய்களுக்கு நிகர் வேறெதுவும் கிடையாது.
நாய்களின் குறிப்பிடத்தகுந்த குணங்களில் ஒன்று விஸ்வாசம். தன்னை வளர்க்கும் எஜமான் மீது நாய்கள் எப்போதும் அளவில்லாத பாசம் வைக்கும். ஒருவேளை அவர்களை பிரிய நேர்ந்தால் அந்த விஸ்வாச மிகுந்த நாய்கள், உணவு உண்ணாமல் மரணித்து போன பல சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம்.
3 சிட்டுக்குருவியை காக்க.. ஒரு கிராமமே சேர்ந்து எடுத்த முடிவு.. சிவகங்கையில் நடந்த விசித்திர சம்பவம்
செல்ல நாய்
ஆனால் அமெரிக்காவில் தனது எஜமானை பிரிந்த நாய், இரண்டு வருடங்கள் கழித்து அவர்களது வீட்டை தேடி 80 கிலோ மீட்டர் நடந்தே சென்றடைந்த நெகிழ வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் மிசூரியில் வசித்து வந்த ட்ரூ என்பவர் க்ளியோ எனும் நாயை வளர்த்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்ரூ, தனது குடும்பத்துடன் கான்சாஸ் எனும் ஊருக்கு குடிபெயர்ந்துவிட்டார்.
வருத்தம்
அப்போது எதிர்பாராதவிதமாக க்ளியோ காணாமல் போய்விட்டது. இதனால் ட்ரூவும், அவரது குடும்பமும் மிகுந்த வருத்தமடைந்தனர். பல இடங்களில் தேடியும் க்ளியோவை கண்டுபிடிக்க முடியவில்லை. சமூகவலைதளங்களிலும் க்ளியோவின் புகைப்படத்தை பதிவிட்டு, நாய் காணாமல் போனது குறித்து வருந்தி இருந்தார் ட்ரூ.
தேடி வந்த நாய்
இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து க்ளியோ, மிசூரியில் உள்ள தனது எஜமானின் பழைய வீட்டை வந்தடைந்தது. அந்த வீட்டில் தற்போது குடியிருக்கும் கோல்டன் மைக்கேல் என்பவர் க்ளியோவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மைக்ரோ சிப்பை சோதித்து பார்த்தார். அப்போது அது க்ளியோ தான் என்பது உறுதியானது.
மகிழ்ச்சி வெள்ளம்
பின்னர் கோல்டன் மைக்கேல் பெரும் முயற்சி செய்து, கன்சாசில் உள்ள ட்ரூவின் இருப்பிடத்தை கண்டுபிடித்து, க்ளியோவை அவர்களிடம் ஒப்படைத்தார். வெகு நாட்களாக தேடிக் கொண்டிருந்த க்ளியோவை பார்த்ததும், மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்து போனது ட்ரூவின் குடும்பம்.
ஆற்றையும் கடந்தது
மிசூரியில் இருந்து தொலைந்துபோன அந்த நாய், தனது எஜமானனின் பழைய வீட்டை வந்தடைய சுமார் 80 கிலோ மீட்டர் வரை பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. தனது குடும்பத்தினரை பார்க்க ஒரு ஆற்றையும் கடந்து வந்திருக்கிறது க்ளியோ. க்ளியோவின் அன்பையும், விஸ்வாசத்தையும் நினைத்து உச்சி குளிர்ந்து போயிருக்கிறது ட்ரூவின் குடும்பம்.கோல்டன் மைக்கேல் குடும்பத்தினருக்கும் தற்போது செல்லப்பிள்ளையாக மாறிவிட்டது க்ளியோ.