கொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா!
நியூயார்க்: கொரோனா காலம் முடிந்தாலும் 2 கோடி சிறுமிகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என பாகிஸ்தான் கல்வி ஆர்வலரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசப்ஸாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளி செல்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண் கல்விக்காக பாடுபட்டவர் மலாலா. இவர் தலிபான் பயங்கரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு உயிர் தப்பினார்.
இந்தியாவில் முதல் முறையாக குறைய தொடங்கியிருக்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு
நோபல் பரிசு
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. சர்வதேச அளவில் பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்காக அவர் பாடுபட்டு வருகிறார்.
கூட்டு முயற்சி
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் கொரோனா பாதிப்பால் பெண்கள் கல்வி கற்பதை மேம்படுத்தும் கூட்டு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2 கோடி
நோய்த் தொற்று பாதிப்பு முடிவடைந்த பின்னரும் 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படலாம். பெண்கள் கல்விக்கான இலக்கை எட்டுவதில் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்த அளவே சாதிக்க முடிந்து இருக்கிறது. உலகளவில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒரு ஆண்டிற்கு 200 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என அவர் கூறினார்.
கல்வி நிறுவனங்கள்
பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது, உலகில் உள்ள மாணவர்களில் 94 சதவீதம் பேரை பாதித்துள்ளது. கல்வி கட்டமைப்பு வரலாற்றில் கொரோனா தொற்று மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. 190 நாடுகளில் 1.6 பில்லியன் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என ஐநா கடந்த மாதம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.