ஒரே ஒரு எழுத்துப்பிழை.. தான் இறந்து விட்டதாக போலிச் சான்றிதழ் தயாரித்து மாட்டிக் கொண்ட இளைஞர்!
அமெரிக்காவில் போலி மரண சான்றிதழ் மூலம் தண்டனையில் இருந்து தப்ப நினைத்த குற்றவாளி ஒருவர், எழுத்துப்பிழையினால் சிக்கிக் கொண்டார்
நியூயார்க்: அமெரிக்காவில் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க நினைத்து, தான் இறந்துவிட்டதாக நாடகமாடி, போலி மரண சான்றிதழ் தயாரித்து நபர் கையும் களவுமாக பிடிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
நியூயார்க்கின் ஹண்டிங்டன் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் வில்லியம் பர்கர். 25 வயதாகும் இவர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். அதில் ஒரு குற்ற வழக்கில் அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் அப்போது ராபர்ட் நைசாக அங்கிருந்து தப்பிவிட்டார். சிறை தண்டனையை தவிர்க்க நினைத்த அவர் வித்தியாசமான திட்டம் ஒன்றை தீட்டினார். அதன்படி, தான் ஏற்கனவே இறந்துவிட்டதாக போலி மரண சான்றிதழ் ஒன்றை தயாரித்து தனது காதலி மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த சான்றிதழில் ராபர்ட் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலில் எந்த சந்தேகமும் இன்றி ராபர்ட்டின் மரண சான்றிதழை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதன் பிறகு அந்த சான்றிதழ் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தேகம் எழுப்பினார். அதற்கு காரணம் அந்த சான்றிதழில் 'Registry' எனும் வார்த்தை 'Regsitry' என எழுத்து பிழையாக அச்சிடப்பட்டிருந்தது தான். அதேபோல் எழுத்துருக்களும் ஒரே மாதிரி சீராக இல்லாமல், எசக்கு பிசக்காக இருந்தது.
வீட்டுக்கு வீடு டீசல் விநியோகம் செய்ய அழைப்பு.. இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கு!
எனவே அந்த சான்றிதழின் உண்மைதன்மை குறித்து ஆய்வு செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அந்த சான்றிதழை ஆய்வு செய்த போது, அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதனால் ராபர்ட் தான் இறந்துவிட்டதாக நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ராபர்ட் பர்கரை போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். ஏற்கனவே இருந்த திருட்டு வழக்குடன், போலி சான்றிதழ் கொடுத்து நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தது உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது புதிதாக பதியப்பட்டுள்ளன. இதனால் அவருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.