முகவரியை கொடுத்துவிட்டு பீட்சா கடையில் கொள்ளை.. இந்த திருடனை சமத்துனு சொல்றதா இல்ல மக்குனு திட்டுறதா
நியூயார்க்:போலீசிற்கு அதிக வேலை வைக்காமல் திருடனே தனது முகவரியைக் கொடுத்து விட்டு, பீட்சா கடையில் பணப்பெட்டியைத் திருடிக் கொண்டு சென்ற வேடிக்கையான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர்.
இந்த சூழலில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் விநோதமான திருட்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
முகவரி
கடந்த மாதம் 26ம் தேதி வடக்கு கட்டாசாகுவாவில் உள்ள ஒரு பீட்சா கடைக்கு 22 வயது இளைஞர் நிகோலஸ் மார்க் என்பவர் வேலை கேட்டு சென்றிருக்கிறார். அந்த கடையின் ஊழியர்களிடம் தனது பெயர், முகவரி, செல்போன் எண் போன்றவற்றை கொடுத்து, வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார் நிகோலஸ்.
திருட்டு
பின்னர் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென மனதை மாற்றிக்கொண்டார் மார்க். வேலை கேட்டு பிரயோஜனமில்லை என அவர் கத்தியைக் காட்டி மிரட்டி, அங்கிருந்த பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டார். அதனால் கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
பணம் மீட்பு
நிகோலஸ் தனது முழு விவரத்தையும் பீட்சா கடையில் கொடுத்திருந்ததால், அதிக சிரமமில்லாமல் அவரை போலீசார் எளிதாக கைது செய்துவிட்டனர். அவரிடம் இருந்து பணப் பெட்டியை மீட்ட போலீசார், நிகோலஸ் மார்க்கின் பையில் இருந்து கத்தி மற்றும் போதை பொருட்களையும் கைப்பற்றினர்.
வழக்குப் பதிவு
நிகோலஸ் தூக்கிச் சென்ற அந்த பணப்பெட்டியில் 220 அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.16155 இருந்திருக்கிறது. கைதான நிகோலஸ் மீது திருட்டு, ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்தல், கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுதல், போதை பொருட்கள் வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காமெடியோ காமெடி
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும், கைரேகையை தேட வேண்டும் என போலீசிற்கு அதிக வேலை வைக்காமல் திருடனே தனது முகவரியைக் கொடுத்து விட்டு, திருடிச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை தேடி நல்ல பிள்ளையாக அங்கு சென்ற மார்க், திடீரென ஏன் மனதை மாற்றிக் கொண்டார் என்பது தெரியவில்லை.