ஒரே ஒரு ஒளிரும் மரப்பெட்டி.. ஒட்டுமொத்த பெண்களின் ஹீரோவான ‘பேஸ்புக்’ மார்க்!
நியூயார்க்: தனது மனைவி நிம்மதியாக தூங்குவதற்காக ஒளிரும் மரப்பெட்டி ஒன்றை உருவாக்கி பாராட்டுகளை அள்ளியுள்ளார் பேஸ்புக் அதிபர் மார்க்.
பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் தூக்கம் என்பதை கொஞ்ச நாளைக்கு மறந்துவிட வேண்டியது தான். ஏனெனில் குழந்தை எப்போதெல்லாம் அழுமோ, அப்போதெல்லாம் அதற்கு உணவளிக்க வேண்டும், அதனை சுத்தப்படுத்த வேண்டும் என தாய்க்கு பல பொறுப்புகள் வந்து விடும். இதனால் பல பெண்கள் தங்கள் உடல்நிலையைக் கூட கவனிக்க தவறி பல பிரச்சினைகளில் சிக்கி விடுவர்.
அப்படியாக தனது மனைவி பிரிசில்லா தூக்கமில்லாமல் அவதிப்படுவதை தவிர்க்க, மரப்பெட்டி ஒன்றைத் தயாரித்துள்ளார் பேஸ்புக் அதிபர் மார்க். பிரிசில்லா, இரவு நேரத்தில் இடையூறு எதுவும் இல்லாமல் தூங்குவதற்காக ஒளிரும் தன்மையுள்ள இந்த மரப்பெட்டியை அவர் உருவாக்கியுள்ளார்.
அத்துமீறி நுழைந்ததாக இந்திய பத்திரிகையாளரை கைது செய்த இலங்கை போலீஸ்
ஒளிரும் பெட்டி:
காலை 6 மணிக்கும், 7 மணிக்கும் அந்த பெட்டி மங்கலான ஒளியை உமிழ்கிறது. ஏனெனில் அப்போதுதான் மார்க்கின் இரண்டு மகள்களும் கண் விழிப்பார்கள். இதன்மூலம் அலார ஓசைக்காக காத்திருக்காமல் அந்த மங்கலான ஒளிக்கு பின் பிரிசில்லா பதற்றம் இன்றி நிம்மதியாக எழ முடியும்.
மனைவிக்காக ஸ்லீப் பாக்ஸ்:
இதுபற்றி பேசிய மார்க், ‘தன் மனைவி பிரிசில்லா குழந்தைகள் பெற்ற நாள் முதலாய் தூங்காத இரவுகளைக் கொண்டுள்ளதாகவும், குழந்தைகள் விழித்துவிட்டார்களா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டிருப்பார். இதனால் அவர் சரியாய் தூங்க வேண்டுமென்று நினைத்து ஸ்லீப் பாக்ஸ் என்றொரு சாதனத்தை உருவாக்க நினைத்ததாக' தெரிவித்துள்ளார்.
விரைவில் விற்பனைக்கு:
மார்க் தனது மனைவிக்காக உருவாக்கியுள்ள இந்த பெட்டி, தற்போது அவரது நண்பர்கள் மத்தியிலும் பிரபலமாகி விட்டது. விரைவில் இதே போன்று பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் ஒளிரும் பெட்டிகளை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக மார்க் தெரிவித்துள்ளார்.
ஹீரோவான மார்க்:
மனைவி நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காக இப்படி தனித்துவமான பெட்டியை உருவாக்கியுள்ள மார்க்கிற்கு, சமூகவலைதளத்தில் பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒரே ஒரு பெட்டி மூலம் பெண்கள் மத்தியில் ஹீரோவாகி விட்டார் மார்க்.