கதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்!
அமெரிக்காவில் வீட்டின் கதவை திறந்த பெண்ணின் தலையில் பாம்பு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நியூயார்க்: அமெரிக்காவில் வீட்டின் கதவை திறந்த பெண்ணின் தலையில் பாம்பு விழுந்த விநோதச் சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டியன் மிச்செல். இவர் கடந்த வாரம் வேலை முடிந்து வீடு திரும்பினார். கை பையில் இருந்து சாவியை எடுத்து வீட்டின் முன்பக்க கதவை திறந்தார்.
மிச்செல் உள்ளே நுழைந்த போது மேலே இருந்து ஒரு பாம்பு அவர் தலையில் விழுந்தது. பாம்பை பார்த்த மிச்செல், அதிர்ச்சியில் உறைந்துபோனார். மிச்செலின் தலையில் விழுந்த பாம்பு, பின்னர் நழுவி அவரது காலில் விழுந்தது.
இந்தியாவில் எப்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி மனித பரிசோதனை...டாக்டர் ரெட்டி புதிய தகவல்!!
துடைப்பம்
டக்கென சுதாரித்து கொண்ட மிச்செல், அவரது கணவரை உதவிக்கு அழைத்தார். ஆனால் கணவர் வருவதற்கு முன்னதாகவே வீட்டில் இருந்த துடைப்பத்தை எடுத்து வந்து, பாம்பை வெளியே தள்ளிவிட்டுவிட்டார். சுமார் 10 இன்ச் நீளம் கொண்ட அந்த குட்டிப் பாம்பு, தன் வழியை பார்த்துகொண்டு சென்றுவிட்டது.
விஷமற்ற பாம்பு
"பாம்பு முதலில் எனது தலையில் விழுந்தது. பின்னர் காலில் விழுந்து ஊர்ந்து சென்றது. பின்னர் என்னை கடிக்க முயன்றது. அது விஷத்தன்மையற்ற சாரைப் பாம்பு என தெரிந்துகொண்டேன். துடைப்பத்தை எடுத்து அதை தள்ளிவிட்டுவிட்டேன். அந்த பாம்பை அடித்து கொல்ல எனக்கு மனமில்லை", என நடந்த சம்பவம் குறித்து விவரிக்கிறார் கிறிஸ்டியன் மிச்செல்.
பிட்சர் தான் காரணம்
மிச்செல் வீட்டில் உள்ள பிட்சர் எனப்படும் ஒருவகை செடியின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக தான் அந்த பாம்பு அவரது வீட்டில் நுழைந்திருக்கிறது. இருப்பினும் அந்த செடி தனக்கு மிகவும் பிடித்தமானது என்பதால் அதனை வெட்ட மிச்செல் விரும்பவில்லை. மீண்டும் பாம்பு வந்தாலும் பரவாயில்லை என்கிறார் மிச்செல்.
பல்லிக்கே பதறுவோம்
நம்மூரில் தலையில் பல்லி விழுந்தாலே பதறிப் போவோம் நாம். ஆனால், பாம்பே விழுந்தபோதும், பதறாமல் நிதானமாகச் சிந்தித்து, விஷமில்லாத பாம்பு என்பதால் அதனைக் கொல்லாமல் மனிதநேயத்துடன் விரட்டி விட்டுள்ளார் இப்பெண். உண்மையிலேயே கெத்து தான்.