மோடி என்னிடம் உதவி கேட்டார்.. கொளுத்திப்போட்ட டிரம்ப்.. இம்ரான் கானுடன் நடந்த சந்திப்பில் பரபரப்பு!
காஷ்மீர் பிரச்னையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நியூயார்க்: காஷ்மீர் பிரச்னையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப்பின் இந்த பேட்டி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அமெரிக்க பயணம் சர்ச்சை மேல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. முதலில் இம்ரான் கானை அழைக்க விமான நிலையத்திற்கு யாருமே வரவில்லை என்று வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் இம்ரான் கான் மற்றும் டிரம்ப் இருவரும் நடத்திய சந்திப்பில் பாகிஸ்தான் ராணுவ மேஜர் இடம்பெற்று இருந்தது பெரிய பிரச்சனையானது. இந்த நிலையில் தற்போது காஷ்மீர் பிரச்சனையும் இந்த சந்திப்பால் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.
என்ன சொன்னார்
இம்ரான் கான் மற்றும் டிரம்ப் இருவரும் நடத்திய சந்திப்பில், இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டார். அதில், காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். ஆனால் இந்தியா அதை எதையும் ஏற்பது இல்லை. நாங்கள் முன்னெடுக்கும் அழைப்புகளை அவர்கள் ஏற்பதில்லை என்று கூறினார்.
என்ன பதில்
இதற்கு பதில் அளித்த டிரம்ப், காஷ்மீர் பிரச்னையை தீர்க்க இந்தியாவும் தயாராகவே இருக்கிறது. பிரதமர் மோடி இந்த பிரச்சனையை தீர்க்க தயாராக இருக்கிறார். கடந்த மாதம் நாங்கள் ஜப்பானில் சந்தித்த போது கூட அவர் இதை குறித்து பேசினார். காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவ வேண்டும் என்று கூறினார்.
நான் தயார்
காஷ்மீர் பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த உதவ வேண்டும் என்று கூறினார். நான் கண்டிப்பாக உதவ தயார். உங்கள் இரண்டு நாட்டிற்கும் ஓகே என்றால் கண்டிப்பாக நான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க தயார். இந்தியாவும் பாகிஸ்தான் போலத்தான். இரண்டு நாடுகளும் இந்த பிரச்சனையை சரி செய்யத்தான் நினைக்கிறது, என்று கூறினார்.
என்ன சர்ச்சை
டிரம்ப்பின் இந்த பேச்சுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. என்ன மோடி காஷ்மீர் பிரச்சனையில் டிரம்ப்பிடம் உதவி கேட்டாரா? இந்தியாவில் எந்த பிரதமரும் இதற்கு முன் இப்படி செய்தது கிடையாது. ஏன் மோடி மட்டும் இப்படி அமெரிக்க அதிபரிடம் உதவி கேட்டார் என்று பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
எப்போது நடந்தது
கடந்த மாதம் ஜப்பானில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் சந்தித்துக் கொண்டார்கள். அதில் மோடி இந்த கோரிக்கையை வைத்ததாக கூறப்படுகிறது. பொதுவாக காஷ்மீர் பிரச்சனையை இந்தியா - பாகிஸ்தானின் தனிப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்ப்போம், வேறு நாட்டை இதில் ஈடுபடுத்த மாட்டோம் என்பதே மத்திய அரசின் கொள்கையாக இருந்தது.
ஆனால் என்ன
ஆனால் தற்போது இந்திய பிரதமர் ஒருவரே அமெரிக்க அதிபரிடம் பேச்சுவார்த்தைக்கு உதவ அழைத்து இருப்பதாக வெளியாகும் செய்திகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் பலத்தை இது குறைக்கும் என்று கூறுகிறார்கள்.