ஐ.நா கூட்டத்தில் செப்.27-ல் மோடி உரை!
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் வரும் 27-ந் தேதி பிரதமர் மோடிக்குப் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றுகிறார். இம்ரான்கான் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தம்முடைய உரையில் முன்வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. பொதுச்சபையின் 74-வது ஆண்டு கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இம்மாதம் 27-ந் தேதியன்று பிரதமர் மோடி பேசுகிறார். இதனையொட்டி ஒருவாரம் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறை பிரதமரான பின்னர் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் முதல் முறையாக மோடி பேசுகிறார். பிரதமர் மோடி பேசிய பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. கூட்டத்தின் போது காஷ்மீரில் பிரச்சனையை உருவாக்க மசூத் அசார் மூலம் பாக் பயங்கர சதி திட்டம்
சர்வதேச அரங்குகளில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதும் மூக்குடைபடுவதும் பாகிஸ்தானின் வாடிக்கையாகிவிட்டது. இதேபாணியில் ஐ.நா. பொதுக்கூட்டத்திலும் காஷ்மீர் விவகாரத்தை இம்ரான்கான் எழுப்பக் கூடும் என்றே தெரிகிறது.
முன்னதாக ஐ.நா.வின் சர்வதேச காலநிலை தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.