முதல்முறை இப்படி நடக்கிறது.. விண்வெளியில் நிகழ்ந்த திக் கிரைம்.. விசாரணையில் இறங்கிய நாசா!
நியூயார்க்: உலகிலேயே முதல்முறையாக விண்வெளியில் ஒருவர் இருக்கும் போது அவர் மீது பூமியில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதிலும் அவர் விண்வெளியில் இருந்து செய்த தவறால் பூமியில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
அன்னே மெக்கிளைன் மற்றும் சம்மர் வார்டன் இருவரும் ஒருபாலின தம்பதியினர். அமெரிக்காவின் விமானப்படையில் வேலை பார்க்கும் இவர்கள் 2014 திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின் இவர்கள் 2018ல் விவாகரத்து பெற்று, தற்போது வரை தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களின் குழந்தையை 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி கவனித்துக் கொள்கிறார்கள்.
என்ன சிக்கல்
இந்த நிலையில் நாசா மூலம் அன்னே மெக்கிளைன் சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்றார். அங்கு அவர் ஆராய்ச்சி பணிகளை செய்து வந்தார். அப்போது அங்கு இணையத்தை பயன்படுத்திக் கொண்டு இருந்த அவர், பூமியில் உள்ள சம்மர் வார்டன் வங்கி கணக்கை திறந்து பார்த்துள்ளார். தன் முன்னாள் இணையின் பாஸ்வோர்ட் தெரிந்து, ஆகாயத்தில் உள்ள ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து அந்த வங்கி கணக்கை பார்த்துள்ளார்.
தெரிந்தது
இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டு, வங்கி நிர்வாகம் மூலம் சம்மர் வார்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்மர் வார்டன் தற்போது அன்னே மெக்கிளைன் மீது வழக்கு தொடுத்துள்ளார். அதன்படி அன்னே மெக்கிளைன் தன்னுடைய கணக்கை ஆகாயத்திலிருந்து தன்னுடைய அனுமதி இல்லாமல் திறந்து பார்த்து இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
விசாரணை
ஆனால் அன்னே மெக்கிளைன் ஆகாயத்தில் இருந்ததால் அவரை அப்போது விசாரிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இறுதியில் அவர் பூமிக்கு வந்தார். தற்போது அவர் மீதான வங்கி மோசடி புகார் மீது விசாரணை நடந்து வருகிறது. இதில் விசித்திரம் அவர் தனது தவறை பூமியில் எங்கும் செய்யவில்லை. ஆகாயத்தில் செய்து இருக்கிறார்.
இப்படி
உலகில் முதல்முறை ஒருவர் வங்கி முறைகேடு அல்லது தண்டனைக்கு உரிய தவறு ஒன்றை ஆகாயத்தில் இருந்து செய்துள்ளார். இவர் அமெரிக்கர் என்பதால் இவர் மீது அமெரிக்க சட்டம் பாயும். ஆகாயத்தில் யார் தவறு செய்தாலும் அவர் எந்த நாட்டை சேர்ந்தவரோ அதற்கு ஏற்றபடி அந்த நாட்டு சட்ட ரீதியாக வழக்கு பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.