மனித வரலாற்றை கண்டுபிடிக்கும்.. செவ்வாயில் இன்று கால் பதிக்கிறது இன்சைட் ரோபோட்.. சிறப்பு என்ன?
செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய இன்சைட் ரோபோட் இன்று செவ்வாய் கிரகத்தில் களமிறங்க உள்ளது.
Recommended Video
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய இன்சைட் ரோபோட் இன்று செவ்வாய் கிரகத்தில் களமிறங்க உள்ளது.
உலக வரலாற்றில் இன்று நாசா மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்ய போகிறது. மனித குலத்தின் வரலாறு மட்டுமில்லாமல் மொத்த உலகத்தின் வரலாற்றையும் நாசா கண்டுபிடிக்க உள்ளது.
ஆம் நாசா செவ்வாயை ஆராய்ச்சி செய்ய அனுப்பி இருக்கும் இன்சைட், இன்று இரவு செவ்வாயில் களமிறங்க உள்ளது. இது உலக வரலாற்றை கண்டுபிடிக்க உள்ளது.
ஏற்கனவே இறங்கிவிட்டது
உலக நாடுகள் ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சி செய்ய ரோபோட்கள், விண்கலம் ஆகியவற்றை அனுப்பி உள்ளது. செவ்வாயில் இதுவரை இறங்கி வெற்றிபெற்ற திட்டங்கள் என்று பார்த்தால், வைகிங் 1, வைகிங் 2, பீனிக்ஸ், க்யூரியாசிட்டி, ஸ்பிரிட், மார்ஸ் பாத் பைண்டர், ஆபர்ஜுனிட்டி ஆகிய நாசாவின் திட்டங்களும், மார்ஸ் 3 என்ற ரஷ்யாவின் திட்டமும் மட்டுமே ஆகும்.
எப்போது அனுப்பியது
இந்த நிலையில்தான் நாசா தற்போது இன்சைட் ரோபோட்டை செவ்வாய்க்கு அனுப்பி இருக்கிறது. கடந்த மே மாதம் 5ம் தேதி செவ்வாயை நோக்கி, நாசா தனது இன்சைட் விண்கலத்தை அனுப்பியது. நாசா கடந்த முறை பீனிக்ஸ் விண்கலத்தை எப்படி அனுப்பியதோ அதேபோல்தான் இதையும் அனுப்பியது. பீனிக்ஸ் விண்கலம் செவ்வாயில் இறங்கியது போலத்தான் இதுவும் அங்கு தரையிறங்கும்.
6 மாத பயணம்
இது சரியாக 6 மாதங்கள் கழித்து இப்போதுதான் செவ்வாயில் களமிறங்க உள்ளது. வேன்டென்பேர்க் ஏர்போர்ஸ் விமான மையத்தில் இருந்து இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. 300 மில்லியன் மைல்களை இந்த விண்கலம் கடந்துள்ளது.
என்ன வித்தியாசம்
இதற்கும், இதற்கு முன் அனுப்பப்பட்ட ஆராய்ச்சி கலங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இது செவ்வாயில் ஒரே இடத்தில்தான் இருக்கும். செவ்வாயில் எந்த பகுதியிலும் இது ஊர்ந்து செல்லாது. ஆனால் இதுவரை செவ்வாயை மற்ற விண்கலங்கள், ரோபோக்கள் ஆராய்ச்சி செய்யாத அளவிற்கு இது ஆராய்ச்சி செய்ய இருக்கிறது.
உள்ளே ஆராய்ச்சி செய்யும்
இது செவ்வாயில் ஏற்படும் நிலநடுக்கம், தரையில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம், செவ்வாய்க்கு உட்புறம் உள்ள மூலக்கூறுவில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றை கணக்கிடும். அதாவது இந்த இன்சைட் செவ்வாயின் உட்புறத்தை சோதனை செய்ய போகிறது. இதுவரை எந்த விண்கலமும் செவ்வாயின் உட்புறத்தை சோதனை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்தை தெரிந்து கொள்ள முடியும்
இதன் மூலம் நாம் நம் உலகத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும். நமக்கு நம்முடைய பூமியில் உள்ள பொருட்களின் வரலாறு மட்டுமே தெரியும். செவ்வாயின் உட்பகுதியை ஆராய்ச்சி செய்வதன் மூலம், அதன் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். இதனால் மொத்தமாக இந்த உலகம் எப்படி உருவானது என்று கண்டுபிடிக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அதன் மூலம் மனித வரலாறும் தெரியவரும்.
இன்று நள்ளிரவு
இந்த இன்சைட் இன்று நள்ளிரவில் தரையிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதை லைவாக ஒளிபரப்பும் திட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டால், உலக வரலாற்றில் பெரிய மைல்கல்லாக இருக்கும்.