ஹேப்பி நியூஸ்.. நியூயார்க்கில் முதல் முறையாக குறைகிறது கொரோனா நோயாளி எண்ணிக்கை.. காரணம் இதுதான்!
நியூயார்க்: கொரோனா வைரசால் அமெரிக்காவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரம், நியூயார்க். தற்போது அந்த நகர மக்கள் நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
Recommended Video
அதாவது, புதன்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், புதிய ஐ.சி.யூ சேர்க்கைகளும் குறைய ஆரம்பித்துள்ளது.
தொற்றுநோய்க்கு எதிரான நியூயார்க் மாகாண போரில், வெற்றிக்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. லாக்டவுன் பலன் அளிக்க ஆரம்பித்துள்ளதாக பலரும் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.
சவுதி அரச குடும்பத்தையும் தாக்கிய கொரோனா வைரஸ்.. 150 பேருக்கு பாதிப்பு.. ரெடியாகும் மருத்துவமனை
அதிக எண்ணிக்கை
நியூயார்க்கில், 24 மணி நேரத்தில், கொரோனாவால் 799 பேர் பலியாகினர். இதுவரையில் ஒரே நாளில் இத்தனை பேர் கொல்லப்பட்டது இதுதான் முதல் முறை. அதேநேரம், நோயாளிகள் எண்ணிக்கையும் 10,621 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் புதிதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 200 ஆக குறைந்தது. இது கொரோனா தாக்கம் தொடங்கியதிலிருந்து மிகக் குறைவான எண்ணிக்கை என்று ஆளுநர் கியூமோ கூறினார்.
முதல்முறை குறைவு
ஐ.சி.யூ சேர்க்கைகளின் எண்ணிக்கை மார்ச் 20 க்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையில் இப்போதுதான் நடந்துள்ளது. புதன்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, இந்த எண்ணிக்கை 200 என்ற அளவில் மட்டுமே அதிகரித்தது. இதேநிலை தொடர்ந்தால், மருத்துவமனைகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை விரைவில் குறையத் தொடங்கும். வைரஸ் தாக்குதல் அதன் உச்சகட்டத்தை கடந்துவிட்டது என்பதற்கான அறிகுறி இதுவாகும்.
ஆன்டிபாடி
இதனிடையே, நியூயார்க் மாநில சுகாதாரத் துறை ஆன்டிபாடி சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இப்போது பரிசோதனை தேவைப்படும் பல லட்சம் பேருக்கு இது உதவக்கூடும். மேலும் ரேப்பிட் பரிசோதனையை நடத்தவும் திட்டம் உள்ளது. ஒரு நபருக்கு தற்போது வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பதை விரைவாகச் சொல்லும் டெஸ்ட் இதுவாகும். மேலும் வைரஸ் தாக்குதலிருந்து மீண்டு வந்தவர்கள் ரத்த தானம் செய்யுமாறு கோரப்படுகிறார்கள். நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்த பிளாஸ்மா பயன்படுத்தப்படலாம்.
நியூ ஜெர்சி நிலைமை
நியூ ஜெர்சியின் ஆளுநர் பிலிப் டி. மர்பி, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தின் முன்னேற்றமடைந்து வருவதாகவும், ஆனால், தங்கள் மாகாணத்தில், மேலும் 198 பேர் இறந்துள்ளதாக தெரிவித்தார். வென்டிலேட்டர்களில் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைந்து, 1,576 இலிருந்து 1,551 ஆகிவிட்டதாகவும், புதன்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, நோய்த்தொற்றின் வளைவு தட்டையாக மாற்றப்பட்டது என்பதற்கான அறிகுறியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.